பாரபட்சமின்றி செயல்படுங்கள் - தேர்தல் அதிகாரிகளுக்கு நரேஷ்குப்தா கடிதம் மூலம் வேண்டுகோள்
சென்னை: அரசியல் சார்பற்று, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் நரேஷ் குப்தா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது..
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பணியாளர்களும் குறிப்பாக தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும், அரசியல் சார்பற்ற நிலையிலும், நடுநிலையோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்ற சிலர், அரசியல் கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. தேர்தல் நடத்தை விதியின்படி இது மிக மோசமான குற்றச்சாட்டு ஆகும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு கடுமையான குற்றம் இது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைமை கல்வி அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுரைகள் வழங்கப்பட்டு, இந்த தவறு மேலும் நடக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
அரசு ஊழியர்கள் அனைவரும் சார்பற்ற நிலையில் இருப்பதையும், அவர்கள் அரசியல் கட்சிகள் அல்லது அரசியல்வாதிகளின் சார்பாக இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று குப்தா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications