பல கோடி சொத்துக்களைக் குவித்துள்ள தங்கபாலுவை விசாரிக்க கோரி வழக்கு
சென்னை: தமிழ காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வருமானத்திற்கு மீறிய வகையில் பல கோடி சொத்துக்களைக் குவித்துள்ளார். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து பழனிவேல் தாக்கல் செய்துள்ள பொது நலன் மனுவில், தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் தங்கபாலு, வருமானத்திற்கு மீறிய வகையில் பெருமளவில் சொத்துக்களைச் சேர்த்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அவர் வைத்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சிபிஐக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் சிபிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே தங்கபாலுவின் சொத்து குவிப்பு குறித்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
'கருணாநிதியின் ஆதரவு-காங்கிரஸ் மறக்காது':
இந் நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு,
மக்களவை தேர்தலுக்கு பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆருடம் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசு, 5 ஆண்டு தொடர்ந்து நீடிக்கும். அதற்கு காங்கிரஸ் முழு ஆதரவும், தேவையான ஒத்துழைப்பும் வழங்கும். மத்தியில் சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் பேரில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் 5 ஆண்டுகள் நல்லாட்சி நடத்தியுள்ளார்.
இதற்கு முதலமைச்சர் கருணாநிதி அளித்த ஆதரவை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் மறக்காது. கூட்டணி மாறியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மக்களை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பாமகவுக்கு என்று நிலையான கொள்கைகள் எதுவும் இல்லை. அதனால் தான் டாக்டர் ராமதாஸ் இப்படி பேசிவருகின்றார் என்றார்.