இலங்கை- தேவாலயத்தில் விஜய்காந்த் பிரார்த்தனை
பழனி: இலங்கைத் தமிழர்களுக்காக பழனியில் தேவாலயத்தில் நடந்த கூட்டுப் பிரார்த்தனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
இலங்கையில் ராணுவ தாக்குதலில் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் பலியாகி வரும் அப்பாவித் தமிழர்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருந்த விஜய்காந், அவர்களுக்காக ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்களில் ஏப்ரல் 14ம் தேதி கூட்டு பிரார்த்தனை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
பழனி ஆர்.எப். ரோட்டில் உள்ள பிளஸட் ஹோப் மிஷன் கிருஸ்துவ தேவாலயத்தில் நேற்று நடந்த கூட்டுப் பிரார்த்தனையில் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
பிராத்தனைக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையி்ல்,
நான் படிக்கும் காலத்தில் கிருஸ்துவ ஆலயங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்துள்ளேன். இலங்கைத் தமிழர்களை காக்க தமிழ்நாடு முழுவதும் மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். இந் நிலையில் போர் நிறுத்த அறிவிப்பு வந்துள்ளது. இந்தப் போர் நிறுத்தம் தொடர வேண்டும். பொதுவான இடம் என்பதால் இங்கு மற்ற விஷயங்களைப் பற்றி (அரசியல்) பேச விரும்பவில்லை என்றார்.
நெல்லை தேமுதிக செயலாளருக்கு கல்தா:
இந் நிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி நெல்லை மாவட்ட தேமுதிக செயலாளர் சீத்தாபதி ராமசுதர்சனை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் விஜயகாந்த்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நெல்லை மாவட்ட தேமுதிக செயலாளர் சீத்தாபதி ராமசுதர்சன் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாலும், கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டமையாலும் அவர் வகித்து வந்த மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
நெல்லை மாநகர் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அவருடன் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மேற்பார்வையாளரான அரவிந்தன் நெல்லை மாநகர் மாவட்ட கழகப் பணிகளை கவனித்து கொள்வார்.
அவருக்கு நெல்லை மாநகர் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications