ஆந்திரா-முதல்வருக்காக நாக்கை வெட்டிய தொண்டர்
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டி தனது நாக்கை வெட்டி காணிக்கையாக்கினார் காங்கிரஸ் தொண்டர் ஒருவர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கூட்டாலா கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (35). தீவிர காங்கிரஸ் தொண்டர். ஹைதராபாத் கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார்.
ராஜசேகர ரெட்டி என்றால் இவருக்கு உயிர். இந்த நிலையில் நேற்று மகேஷ் தனது நண்பர் சீனிவாசனுடன் ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்கு சென்றார்.
அங்கு ராஜசேகர ரெட்டி மீண்டும் முதல்வராக வேண்டி பூஜைகள் நடத்தி அர்ச்சனை செய்தார்.
அப்போது திடீர் என்று தனது பையில் இருந்த கத்தியை எடுத்து நாக்கை அறுத்தார். இதில் ரத்தம் கொட்டியது. இதைப்பார்த்து அருகில் இருந்த நண்பர்கள் சீனிவாசன் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே மகேஷை தடுக்க முயன்றனர். அதற்குள் அவர் நாக்கை துண்டித்து விட்டார். துண்டித்த நாக்குடன் மயங்கி விழுந்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்தனர்.
மகேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகேஷ் சட்டைப்பையில் இருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் ராஜசேகர ரெட்டி ஆந்திராவில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். அவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக எனது சொந்த விருப்பத்தின் பேரில் நாக்கை அறுத்து காணிக்கை செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் நாக்கை அறுப்பது முதல் முறையல்ல. கடந்த சட்டசபை தேர்தலின் போதும் ராஜசேகர ரெட்டி முதலவராக வேண்டும் என்று கோரி தனது நாக்கின் நுனியை அறுத்தார்.
ஆனால் இப்போது அவர் அறுத்ததில் பாதி நாக்கு கட் ஆகி விட்டது.