'தமிழகத்துக்கு நீர் தராத கம்யூ.-பாஜக-காங் அரசுகள்'
கோவை: கேரளாவை ஆளும் கம்யூனிஸ்டுகளும் கர்நாடகத்தை ஆளும் பாஜகவும் ஆந்திராவை ஆளும் காங்கிரசும் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கின்றன. இதனால் இந்தக் கட்சிககளுக்கு வாக்களிக்காதீர்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
கோவை தொகுதி வேட்பாளர் பாண்டியனுக்கு ஆதரவாக சிங்காநல்லூர், ராமநாதபுரம், உக்கடம், தெப்பக்குளம், காந்திபுரம் பகுதிகளில் பிரச்சாரம் செய்த விஜய்காந்த் பேசுகையில்,
நாட்டில் விலைவாசி உயர்ந்துவிட்டது. ஆனால் வருமானம் செருப்பு போல் தேய்ந்து விட்டது. இங்குள்ள அரசியல் கட்சிகள் பாம்பு சட்டையை உரிப்பதுபோல் அவ்வப்போது மாறிக் கொள்வார்கள். இங்கே கம்யூனிஸ்ட் கட்சியினர் ஓட்டுக் கேட்பார்கள். ஆனால் கேரளாவில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்டுகள் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் ஓட்டு போட வேண்டுமா?.
அதேபோல் கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. காவிரி நதி நீரை நமக்கு தர மறுக்கிறார்கள். ஆனால் இங்கே உங்களிடம் ஓட்டு கேட்பார்கள்.
ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பாலாற்று தண்ணீரை கேட்டால் தமிழகத்துக்கு தர மறுக்கிறார்கள்.
ஆனால், இந்த கம்யூனிஸ்டுகள், பாஜக, காங்கிரசுக்கு அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆதரவு தந்து வருகின்றன. அதனால்தான் அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசிடம் திமுக நீர் வளத்துறை அமைச்சர் பதவியை வாங்கியிருந்தால் அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீரை பெற்று தந்திருக்கலாம்.
வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை வாங்கியிருந்தால் இலங்கையில் அன்றாடம் போரில் இறக்கும் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு ஆதாயம் கிடைக்கும் வேறு துறைகளை வாங்கினார்கள்.
மின்சார தட்டுப்பாடு பற்றி பேசினால் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்.
தேர்தல் அதிகாரிகளே, காவல்துறை அளிக்கும் தகவல்களை நம்பாதீர்கள்.
எனக்கொரு வாய்ப்பு தாருங்கள். 40 தொகுதிகளிலும் தேமுதிகவை ஜெயிக்க வைத்தால் நாட்டையே மாற்றிக் காட்டுவேன். நாம் கைகாட்டுபவரே பிரதமர் என்றார் விஜயகாந்த்.