'ராஜபக்சேவின் உண்மையான நண்பர் கருணாநிதி'-நெடுமாறன்
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உண்மையான நண்பராக முதல்வர் கருணாநிதி திகழ்வதாக தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள சிலரது வழிகாட்டுதலின்பேரில் விடுதலைப் புலிகள் தவறான அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதால்தான் இலங்கைப் பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பதாக முதல்வர் கருணாநிதி அண்மையில் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளருமான நெடுமாறன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
போர் நிறுத்தம் என்ற பெயரில் இரு நாள்களாக அதிகமான படைகளை ராஜபக்சே கொண்டு வந்து குவித்து, பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் தமிழ் மக்கள் மீது ஏவுகணைகளையும், எறி குண்டுகளையும் வீசி கொன்று குவித்து வருகிறார்.
இதன்மூலம் கருணாநிதியும், ப.சிதம்பரமும் தங்களது முயற்சியால்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த செய்த முயற்சி ஒரு நாடகம் என்பது நிரூபணமாகிவிட்டது.
கரூரில் அன்னையர் முன்னணி அமைப்பு தலைவர் சரசுவதி தலைமையில் நூறு பெண்கள் ஈழத் தமிழர்களுக்காக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டார்கள். அனுமதி கிடைக்கவில்லை. தனியார் இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற அவர்கள் ஒவ்வொரு இடமாகத் துரத்தப்பட்டு வருகிறார்கள்.
ஈழத் தமிழர்களை ராஜபகேசே துரத்தித் துரத்தி அடிக்கிறார். கருணாநிதியோ தமிழகத்தில் உள்ள தமிழர்களை விரட்டி விரட்டி அடிக்கிறார்.
ராஜபக்சேவின் உண்மையான நண்பராக கருணாநிதி திகழ்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications