திருச்சி காங்கிரஸ் எம்.பி ஆவாரா சாருபாலா தொண்டமான்?
எம்.ஏ., எம்.பில் படித்துள்ள சாருபாலா தொண்டமான் தற்போது திருச்சி மாநகர மேயராக இருக்கிறார். மேயர் பதவியை அவர் வகிப்பது இது 2வது முறையாகும்.
1958ம் ஆண்டு பிறந்த சாருபாலாவின் கணவர் ராஜ ராஜ கோபால தொண்டமான். பொருளாதாரத்தில் எம்.ஏ., எம்.பில் முடித்துள்ள சாருபாலா, தற்போது பி.எச்.டியும் செய்து வருகிறார்.
ஒரு மகன், ஒரு மகள் சாருபாலாவுக்கு உள்ளனர். இவரது தாத்தா பாஸ்கர தொண்டமான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். பெருந்தலைவர் காமராஜரிடம் செயலாளராகவும் இருந்துள்ளார்.
தந்தை சுப்ரமணியன் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளராக இருந்தவர்.
இவரது ஒரு சகோதரரான ராமசுந்தரம் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணைச் செயலாளராக இருக்கிறார். இன்னொருவரான சண்முக பாஸ்கர் டாக்டராக சென்னையில் இருக்கிறார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் சாருபாலா. ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர்.
1998ம் ஆண்டு திருச்சியில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது களத்தில் இறங்கி பணியாற்றி மக்களிடம் நற்பெயரைப் பெற்றார்.
புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளார்.
திருச்சி காங்கிரஸுக்குள் சாருபாலாவுக்கு ஆதரவை விட எதிர்ப்புகளே நிறைய உள்ளன. இருப்பினும் ஜி.கே.வாசனின் செல்வாக்கு மற்றும் ராஜ குடும்பத்துப் பின்னணி ஆகியவற்றை வைத்து எதிர்ப்புகளை திறம்பட சமாளித்து செயலாற்றி வருகிறார் சாருபாலா.
திருச்சி மேயராக நற்பெயர் பெற்றுள்ள சாருபாலாவுக்கு, திருச்சி தொகுதி மக்கள் எம்.பி பதவியை அளிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.