கோபியிலிருந்து மாறி ஈரோட்டுக்கு வந்த இளங்கோவன்

தந்தை பெயர் ஈ.வி.கே. சம்பத். தாயார் சுலோச்சனா சம்பத். 1948ம் ஆண்டு பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு.
மனைவி பெயர் வரலட்சுமி. 2 மகன்கள் உள்ளனர்.
சென்னை மாகாணக் கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் படித்தவர் இளங்கோவன்.
இளங்கோவன் 1984 முதல் 87 வரை சட்டசபை உறுப்பினராக இருந்தார். 1996 முதல் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினரானார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக 1998 முதல் 2000 வரை இருந்தார். பின்னர் 2000மாவது ஆண்டு முதல் 2002 வரை தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
தனது தீவிர ஜெயலலிதா எதிர்ப்பால் காங்கிரஸ் கட்சிக்குள் புதிய ஹீரோவாக உயர்ந்தவர் இளங்கோவன். இவரது செயல்பாடுகள் ஜெயலலிதாவை கொதிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது வரலாறு.
2002 முதல் 2003 வரை காங்கிரஸ் செயல் தலைவராக இருந்தார். ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகா இணைந்ததைத் தொடர்ந்து செயல் தலைவராக்கப்பட்டார் இளங்கோவன். வாசன் தலைவராக செயல்பட்டார்.
2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கோபி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் 25ம் தேதி அவர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக மாற்றப்பட்டார்.
சமூக சேவை, தொழிற்சங்க நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் ரேஸ், கார் ரேஸ்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். சோழாவரம் ரேஸில் கலந்து கொண்டவர்.
ஈ.வி.கே. சம்பத்தின் மகனாக ஆரம்பத்தில் பார்க்கப்பட்ட இளங்கோவன் பின்னர் தனக்கென தனி இமேஜை வளர்த்துக் கொண்டவர். ஆணித்தரமாக கருத்துக்களை எடுத்து வைப்பவர்.
இப்படித்தான் கருணாநிதி குறித்து அவர் கூறிய சில கருத்துக்கள் திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் கருணாநிதியை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார் இளங்கோவன்.
அதையெல்லாம் ஈரோடு திமுகவினர் மனதில் கொள்ளாமல் வாக்களித்தால், ஈரோட்டில் இளங்கோவன் வெல்வதற்கு வாய்ப்புண்டு.












Click it and Unblock the Notifications