புதுவையில் பாமகவுடன் மோதும் நாராயணசாமி

காங்கிரஸ் கட்சியின் கோட்டை புதுச்சேரி. இங்கு காங்கிரஸின் ஆதிக்கம் 1967ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.
அன்று முதல் 2004 வரை நடந்த தேர்தல்களில் 8 முறை காங்கிரஸே வென்றுள்ளது. தமாகா அலை வீசியபோது கூட இங்கு தமாகாவால் வெல்ல முடியவில்லை.
இப்படிப்பட்ட புதுச்சேரியில், கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி வழங்கப்படாமல் கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸார் கொந்தளித்துப் பெரும் போராட்டங்களை நடத்தினர். இருப்பினும் திமுக உதவியோடு புதுச்சேரி காங்கிரஸாரை சமரசப்படுத்தியது காங்கிரஸ்.
இந்த நிலையில் தற்போது கூட்டணியில் பாமக இல்லாததால், புதுச்சேரி மீண்டும் காங்கிரஸ் வசமே வந்து விட்டது.
வலுவான வேட்பாளராக நாராயணசாமி களம் இறக்கப்பட்டுள்ளார்.
62 வயதாகும் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸில் பலம் பொருந்திய தலைவர்களில் ஒருவர். தற்போது ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் நாராயணசாமி, மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சராக இருக்கிறார்.
புதுச்சேரி பூரணாங்குப்பம் கிராமத்தில் பிறந்தவர். சட்டம் படித்தவர். 1985ம் ஆண்டும் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவர். முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் முக்கிய எதிரிகளில் ஒருவர் இவர். இருப்பினும் தற்போதைய முதல்வர் வைத்தியலிங்கம், இவர் பக்கம் இருப்பதால் கோஷ்டி குடைச்சல்களைத் தாண்டி நாராயணசாமி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், பாமக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள தற்போதைய எம்.பி பேராசிரியர் ராமதாஸும், கடும் போட்டியைக் கொடுப்பார் என்பதால் புதுச்சேரி தேர்தல் களம் படு சூடாகவே காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications