அவதூறாக பேச ஆரம்பித்தது அத்வானிதான்: பிரதமர்
குவஹாத்தி: நான் அவதூறாகப் பேசுவதாக அதவானி புகார் கூறுவதில் அர்த்தமே இல்லை. அவர்தான் அப்படி முதலில் பேச ஆரம்பித்தார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் பிரதமர். அதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது அத்வானி தன்னைப் பற்றி அவதூறாகப் பேசி வருவதாக அவர் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், அத்வானிதான் என்னை சோனியா காந்தியின் கொத்தடிமை, பொம்மை பிரதமர் என்று கூறினார். நாட்டிலேயே பலவீனமான பிரதமர் என்றும் என்னை அவர்தான் முதலில் வர்ணித்தார்.
அவர் சொன்ன புகார்களுக்கெல்லாம் பதிலுக்கு நான் விளக்கம் அளித்தேன்.
அத்வானி கடந்த ஐந்து வருட காலமாகவே என் மீது சேற்றை வாரியிறைக்கும் வேலையைத்தான் செய்து வருகிறார்.
இந்த விவகாரத்தை இழுத்துக் கொண்டே செல்ல நான் விரும்பவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
பாபர் மசூதி இடிப்புக்கு காங்கிரஸும் பொறுப்பேற்க வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பாபர் மசூதி இடிப்புக்கு காங்கிரஸைக் குறை கூறவே முடியாது.
அப்போதைய உ.பி. முதல்வர் கல்யாண் சிங்தான் எல்லாவற்றையும் செய்தார். 16ம் நூற்றாண்டு கட்டடமான பாபர் மசூதியைக் காப்பேன் என்று உச்சநீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியைக் காக்கத் தவறியவர் அவர்தான்.
பாபர் மசூதியைக் காப்பேன் என்று கல்யாண் சிங் உச்சநீதிமன்றத்தில், சொன்னதை காங்கிரஸ் முழுமையாக நம்பியது.