வெடிமருந்து பதுக்கிய பஞ். தலைவர் கைது
செங்கோட்டை: செங்கோட்டை அருகே எஸ்டேட்டில் வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த பஞ்சாயத் தலைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கோட்டை போலீஸ் சரகம் குண்டாறு நீர்த்தேக்கம் பகுதியில் ஏராளமான தனியார் எஸ்டேட்டுகள் உள்ளன. இந்த பகுதியில் விகேபுதூர் பஞ்சாயத் தலைவர் எஸ்.எம் பாபு ராஜா என்பவருக்கும் எஸ்டேட் உள்ளது.
இந்த எஸ்டேட்டில் பாறை உடைக்கப் பயன்படும் வெடிமருந்து உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து புளியரை சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அச்சோதனையின் போது அங்கு பதுக்கி வைத்திருந்த 102 டெட்டனேட்டர், 132 ஜெலட்டின் குச்சிகள், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக செங்கோட்டை (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் பாபு ராஜா, லிங்கம், தங்கராஜ், சுரேஷ், ஆகிய 4 பேரையும் கைது செய்து செங்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிபதி ஜெயக்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய அழகு சுந்தரம் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெடிபொருட்கள் பிடிபட்ட சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.