இன்றுடன் ஓய்வு பெற்றார் கோபாலசாமி - புதிய தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்து வந்த கோபாலசாமியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் இன்று தனது கடைசி நாளை அலுவலகத்தில் பூர்த்தி செய்தார்.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஏற்கனவே நவீன் சாவ்லா அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
டி.என்.சேஷன் அளவுக்கு பெரும் பரபரப்பான தலைமைத் தேர்தல் ஆணையராக கோபாலசாமி செயல்படவில்லை என்றாலும் கூட, கடைசி நேரத்தில் நாட்டையே பரபரப்பாக்கி விட்டார்.
நவீன் சாவ்லா காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் கோபாலசாமி.
ஆனால் நவீன் சாவ்லாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் அரசு வேகமாக ஓடி வந்தது. கோபாலசாமியின் அறிக்கையை பரிசீலிக்கத் தேவை இல்லை என்று குடியரசுத் தலைவருக்கு அது பரிந்துரை செய்தது. இதை ஏற்று குடியரசுத் தலைவரும் கோபாலசாமியின் பரிந்துரையை நிராகரித்து உத்தரவிட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கோபாலசாமி அளித்த பேட்டியில், இது நடந்து முடிந்த ஒன்று. இதற்காக நான் வருத்தப்படவில்லை. இதை இனி பேசுவதிலும் அர்த்தம் இல்லை. எனது கடமையைச் செய்தேன், அவ்வளவுதான். இதை வைத்து புக் வெளியிடுவேன் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார் கோபாலசாமி.
கோபாலசாமியின் ஓய்வால் காலியாகியுள்ள தேர்தல் ஆணையர் பதவியை தமிழகத்தைச் சேர்ந்த, ஆந்திர ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி.எஸ்.சம்பத் நிரப்புகிறார்.
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ள நவீன் சாவ்லா 1969ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆழார். 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் தேதியுடன் அவருக்கு வயது 65 ஆகிறது. அன்றுடன் அவர் ஓய்வு பெறுவார்.
2005ம் ஆண்டு மே 13ம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் நவீன் சாவ்லா. அவரது நியமனத்தை பாஜக ஆரம்பத்திலிருந்தே விமர்சித்து வருகிறது.












Click it and Unblock the Notifications