அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மனு தாக்கல் - 40லும் வெற்றி: தா.பாண்டியன்
சென்னை: அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து தேர்தல் களம் விறுவிறுப்பாகியுள்ளது. 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என சிபிஐ செயலாளர் தா.பாண்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் கடைசி கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி 3 நாட்களாகி விட்டது. ஆனால் அதில் 2 நாட்கள் அஷ்டமி, நவமி வந்ததாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் முக்கிய கட்சிகளைச் சேர்ந்த யாருமே மனு தாக்கல் செய்யவில்லை.
நேற்று வரை 52 வேட்பாளர்களே மனுத் தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் முக்கால்வாசிப் பேர் சுயேச்சைகள்தான்.
இன்று நிறைந்த சுப முகூர்த்த நாள். சித்தயோகமும் கூடி வருகிறது. இதையடுத்து இன்று முதல் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கலைத் தொடங்கியுள்ளனர்.
மதுரையில்..
மதுரையில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.மோகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவருடன் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், மாநகர அதிமுக செயலாளர் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வரதராஜன் பேசுகையில், மதுரையில் மகுடம் சூட்டுவோம். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார்.
சென்னையில் ..
வட சென்னை தொகுதி சிபிஐ வேட்பாளரான தா.பாண்டியன் இன்று கூட்டணிக் கட்சியினர் புடை சூழ வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன். இது அவசியம் தேவை. எங்கள் அணி விதியை மீறாது.
வட சென்னை முதல் கன்னியாகுமரி வரை எங்கள் அணி வெற்றிபெறும்.
பிரபாகரன் குறித்து முதல்வர் கருணாநிதி இன்று ஒன்று சொல்லுவார் நாளை ஒன்று கூறுவார். அவர் குழப்பத்தில் இருக்கிறார் என்றார்.
நெல்லையில் ..
நெல்லையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாமலை இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிந்தியா பாண்டியன், தென்காசியில் சிபிஐ வேட்பாளர் லிங்கம், கன்னியாகுமரியில் சிபிஎம் வேட்பாளர் பெல்லார்மின் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
நீலகிரி தனி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் சி.கிருஷ்ணன் ஊட்டியில் மனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரியில் ..
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி இன்று மனு தாக்கல் செய்தார்.
இதேபோல அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் இன்று கூட்டணிக் கட்சியினரோடு சென்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
மதுரை தொகுதியில் போட்டியிட இந்து இளைஞர் பேரவையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் காவடி எடுத்து வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார். கூடவே பசு மாடு ஒன்றையும் அவர் கையோடு கூட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் பசு மாட்டை வெளியில் நிறுத்தி விட்டு பாலாஜி மட்டும் உள்ளே சென்று மனுத் தாக்கல் செய்தார்.
அதிமுக வேட்பாளர்கள் நண்பகல் 12.20 மணியிலிருந்து 1.50 மணிக்குள் மனு தாக்கல் செய்யுமாறு அவர்களுக்கு நேரம் குறித்து கொடுத்திருந்தது அதிமுக தலைமை. அதன்படி அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தேமுதிக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் கூட இன்று முதல் மனு தாக்கல் செய்கின்றனர்.
திமுக வேட்பாளர்கள் கடைசி நாளான 24ம் தேதி மனு தாக்கல் செய்கிறார்கள்.
24ம் தேதி நிறைந்த அமாவாசை. எனவே நல்ல நாளான அன்று நிறையப் பேர் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அனைத்து முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் மனுத் தாக்கல் செய்து முடித்து விட்டால் தேர்தல் களம் படு சூடாகி விடும். மேலும், தலைவர்களும் பிரசாரங்களில் குதித்து விட்டதால் தேர்தல் சூடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.