இன்று மாலை நெல்லை வருகிறார் சரத்குமார்
நெல்லை: சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டதைத் தொடர்ந்து அக்கட்சித் தலைவர் சரத்குமார் இன்று நெல்லை வருகிறார். தேர்தல் பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
பாஜக கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. நெல்லை உள்பட ஐந்து தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
நெல்லை தொகுதிக்கு பொது செயலாளர் கரு.நாகராஜனும், தூத்துக்குடிக்கு காரத்தே சரவணனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்களுடன் சரத்குமார் இன்று மாலை நெல்லை வருகிறார்.
இதுகுறித்து மாநகர் மாவட்ட செயலாளர் சேவியர், கிழக்கு மாவட்ட செயலாளர் இளஞ்சேரன், மாணவரனி துணை செயலாளர் மோகன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், தேர்தல் பணிகள் குறித்து நெல்லை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த சரத்குமார் இன்று மாலை நெல்லைக்கு வருகிறார்.
இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். பி்ன்னர் கார் மூலம் நெல்லைக்கு வருகிறார். இரவு நெல்லையில் தங்கும் சரத்குமார் தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.