ஜமைக்கா விமானக் கடத்தல் முடிவுக்கு வந்தது
கிங்ஸ்டன்: ஜமைக்காவிலிருந்து கனடாவுக்கு கிளம்ப தயாரான கேன்ஜெட் விமானத்தை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் கடத்தினார். அவரது பிடியிலிருந்து 167 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். தற்போது விமானத்தில் உள்ள ஊழியர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கரீபியத் தீவான ஜமைக்காவின் சாங்ஸ்டர் நகரில் இருந்து நேற்று இரவு 10.30 மணிக்கு கனடாவின் ஹாலிபேக்ஸ் நகருக்கு கேன்ஜெட் விமானம் ஒன்று புறப்பட தயாராகி கொண்டிருந்தது.
அதில் சுமார் 170 பயணிகளும், 5 விமான ஊழியர்களும் இருந்தனர். அப்போது விமானத்தில் இருந்த மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கிமுனையில் விமானத்தில் இருந்த அனைவரையும் பணயக் கைதிகளாக பிடித்தான்.
விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவர் இவ்விஷயத்தை படு ரகசியமாக தனது கணவரிடம் செல்போனில் கூறியுள்ளார். உடனடியாக அந்த பெண்ணின் கணவர் போலீசுக்கு தகவல் சொல்ல, விமான கடத்தல் ரகசியம் வெளியில் தெரியவந்தது.
இதையடுத்து ஜமைக்கா அரசு ராணுவ மற்றும் போலீஸ் படையை விமான நிலையத்தில் குவித்தள்ளது. ஜமைக்கா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரும் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகிறார்.
ஆனால், விமானத்தில் அந்த மர்ம மனிதனுக்கு உதவியாக யாரும் இருக்கிறார்களா? அவர்கள் என்ன ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் என தெரியாத நிலையில் போலீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
இதையடுத்து அந்த விமானத்தில் இருந்த பயணிகளில் 167 பேரை கடத்தல்காரர் விடுவித்துள்ளார். 7 விமான ஊழியர்களை மட்டும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். போலீசார் தொடர்ந்து அந்த நபரிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விமானத்தில் துப்பாக்கி ஒன்று சுட்ட சத்தம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், அதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என ஜமைக்கா அரசு அறிவித்துள்ளது.
இந்தக் கடத்தல் குறித்து ஜமைக்கா நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டெரில் வாஸ் கூறுகையில், மன நலம் பாதித்தவர்தான் விமானத்தைக் கடத்தினார். தீவிரவாதம் இதில் இடம் பெறவில்லை.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் இல்லை. கியூபாவுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே அந்த நபரின் ஒரே கோரிக்கையாகும்.
அந்த நபரின் தந்தை, பிரதமர் ப்ரூஸ் கோல்டிங் உள்ளிட்டோர் கடத்தல்காரரிடம் சமரசம் பேசினர்.
விமானத்தில் தற்போது எந்தப் பயணியும் இல்லை. அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விட்டனர் என்றார்.