சரத்பவார் பிரதமராக ஜெயலலிதா ஆதரவு!
டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மூத்த அரசியல் தலைவர், அரசியல் முதிர்ச்சியும், பிரதமர் பதவிக்கான தகுதியும் அவரிடம் உள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், பிரதமர் பதவிக்கு ஆதரவு தருமாறு தனிப்பட்ட முறையில் யாரும் என்னை இதுவரை அணுகவில்லை.
உ.பி. முதல்வர் மாயாவதியைப் பொறுத்தவரை, பிரதமர் பதவிக்கு வர ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கூறியுள்ளார். ஜனநாயக நாட்டில் யாரும் எந்தப் பதவிக்கும் ஆசைப்படலாம்.
என்னிடம் ஆதரவு கேட்டு யாராவது அணுகினால் அதுகுறித்து நான் நிச்சயம் பரிசீலிப்பேன். ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அனைத்து வாய்ப்புகளையும் எதிர்கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். அந்தக் கருத்தில் என்னிடம் எந்த மாற்றமும் இல்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து கருணாநிதி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் சோனியா காந்தி மெளனமாக உள்ளார்.
அவர் காங்கிரஸ் தலைவர் இல்லையா? ராஜீவ் காந்தியின் மனைவி இல்லையா?. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் இல்லையா?. கருணாநிதியின் பேச்சு குறித்து ஏன் மெளனமாக இருக்கிறார்? கருணாநிதி பேச்சு குறித்து தெளிவான முறையில் அவர் பதிலளிக்க வேண்டும்.
கருணாநிதி பேச்சு குறித்து தான் என்ன கருதுகிறேன் என்பதை அவர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இதை அவர் விளக்கியாக வேண்டும்.
பிரபாகரன் குறித்து கருணாநிதி பேசியதற்காக அவரை போலீசார் கைது செய்யவேண்டும். ஆனால் தமிழக போலீசார் முதல்வர் கைபிடிக்குள் இருக்கும் போது, அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும். இது குறித்து மத்திய அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
நெஞ்சம் நெகிழ்கிறது
இதற்கிடையே, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா,
இதுவரை நான் சென்ற இடங்களில் மக்கள் மிகுந்த எழுச்சியுடன் வரவேற்பு கொடுத்தனர். தேர்தல் பிரசாரத்தில் நான் தெரிவிக்கும் கருத்துக்களை கவனமாக கேட்கிறார்கள்.
அந்த கருத்துக்களை ஏற்று கொண்டதாக மக்கள் ஆரவாரம் செய்வது உற்சாகம் அளிக்கிறது. இதுவரை நான் சென்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது நிச்சயம். நாற்பது தொகுதியிலும் வெற்றி பெறுவோம்.
செல்லும் இடங்களில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் பொறுமையாக காத்திருந்து என் பேச்சை கேட்பது நெஞ்சம் நெகிழ்கிறது என்றார் ஜெயலலிதா.
ஜெ.வுக்கு காங். பதில் கேள்வி
இதற்கிடையே, கருணாநிதி, பிரபாகரன், சோனியா குறித்த ஜெயலலிதாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி பதிலளித்துள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இதுகுறித்து கூறுகையில், முதல்வர் கருணாநிதியின் பேட்டி குறித்து காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பதிலளித்து விட்டது. அதை ஜெயலலிதா கவனிக்கவில்லை போலும். பிரபாகரன் ஒரு தீவிரவாதி, விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் என்ற காங்கிரஸ் கட்சியின் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.
காங்கிரஸ் கட்சி ஒரு பேரியக்கம். இங்கு தலைவர் மட்டும்தான் மைக்கைப் பிடித்துப் பேசுவார் என எதிர்பார்க்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் கட்சித் தலைவர்தான் பதிலளிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கக் கூடாது.
எங்களைப் பார்த்து கேள்வி கேட்கும் ஜெயலலிதா, பிரபாகரன் தீவிரவாதி, விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம், அவரைப் பிடித்தால் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஏன் உரத்துக் கூறக் கூடாது என்றார் சிங்வி.