ஈழம்: விமானம் மூலம் உணவு-மருந்து பொட்டலம்: விஜயகாந்த் கோரிக்கை
சென்னை: மறைந்த தலைவர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் செய்ததுபோல, இலங்கையில் தினமும் பசி கொடுமையாலும், நோயாலும் வாடி வதங்கும் அப்பாவி தமிழர்களுக்கு இந்திய அரசு, உணவு மற்றும் மருந்து வகைகளை விமானங்களின் மூலம் நேரடியாக கிடைக்கும் வகையில் போட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிங்கள இனவெறி அரசின் ராணுவ நடவடிக்கை காரணமாக போர் முனையில் 31/2 லட்சம் தமிழ் மக்கள் சிக்கியுள்ளனர்.
உண்ண உணவு இன்றியும், உடுக்க உடை இன்றியும், இருக்க இடம் இன்றியும், சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை இனவெறி ராணுவம் பீரங்கி, ஏவுகணை, குண்டுகள் மூலம் இடைவிடாமல் தாக்குதல் நடத்துகிறது.
வயோதிகர்கள், தாய்மார்கள், குழந்தைகள் என்று யாரும் விதிவிலக்கு அல்ல. தினந்தோறும் நூற்றுக்கணக்கில் மக்கள் சாவதும், ஆயிரக்கணக்கில் காயமுறுவதும், வழக்கமாகிவிட்டது. சரியான மருத்துவர்களோ, மருந்துகளோ அங்கு இல்லை.
சர்வதேச அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், பத்திரிகையாளர்களும், சிங்கள இனவெறி அரசால் இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. நம்முடைய கண் எதிரிலேயே மனிதாபிமானம் அற்ற இந்த தமிழினப்படுகொலை நடந்தேறி வருகிறது.
உலகநாடுகள் அனைத்தும் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் வலியுறுத்தியுள்ளன. விடுதலைப்புலிகள் இயக்கமும் போர் நிறுத்தம் செய்ய தயார் என்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர அரசியல் தீர்வு தான் வழி என்றும் அறிவித்துள்ளது.
சிங்கள வெறியர்களின் தலைவன் ராஜபக்சே...
ஆனால், ராஜபக்சே தமிழினத்தை கூண்டோடு அழிப்பதன் மூலம் சிங்கள வெறியர்களின் தலைவனாகவே இருக்க விரும்புகிறார் என்பதும், இலங்கை சிங்களர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை உருவாக்குவதன் மூலம் தன்னை ஒரு வரலாற்று நாயகனாக சிங்களர்கள் மனதில் இடம் தேடும் வகையில் செயல்படுகிறார் என்பதும், அவர் போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று கொக்கரிப்பதில் புலனாகிறது.
இந்த சூழ்நிலையில் நமது உயிரினும் மேலான தமிழ் மக்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். இன்னும் சில தினங்களில் தமிழர்கள் தஞ்சம் முல்லைத்தீவின் கடைசி பகுதியிலும் விடுதலைப்புலிகளை ஒழிக்கப்போகிறோம் என்ற பெயரால் லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவிப்பதற்கு சிங்கள ராணுவம் தயாராகியுள்ளது.
நடக்கவுள்ள இந்த மனித படுகொலையை தடுக்க இந்திய ராணுவத்தை அந்த பகுதிக்கு அனுப்பி தமிழ் மக்களின் உயிர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
பாதிக்கப்பட்ட போர் முனைப்பகுதிகளில் ஐநாசபை தலையிடுவதற்கும், செஞ்சிலுவை சங்கம் மூலம் முகாம்கள் அமைப்பதற்கும் இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தரை வழியாக செல்லும் எந்த நிவாரண உதவிகளை சிங்கள ராணுவத்தினர் பறித்துக்கொள்வதால், 1987ல் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் செய்ததுபோல, இலங்கையில் தினமும் பசி மற்றும் நோயால் வாடி வதங்கும் தமிழர்களுக்கு இந்திய அரசு, உணவு மற்றும் மருந்து பொருட்களை விமானம் மூலம் நேரடியாக கிடைக்கும் வகையில் போட வேண்டும் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications