வேட்பு மனுவில் சொதப்பிய மன்சூர்-திருப்பி தரப்பட்டது
திருச்சி: திருச்சி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த லட்சிய திமுக வேட்பாளர் மன்சூர் அலிகான் தனது வேட்புமனுவில் முன்மொழிபவர்களின் பட்டியலை முழுமையாக நிரப்பாததை அடுத்து அவரது வேட்புமனு அவரிடமே திருப்பி கொடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் லட்சிய திமுக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கட்சி தலைவர் டி ராஜேந்தர் கள்ளக்குறிச்சியில் போட்டியிடுகிறார். சமீபத்தில் இக்கட்சியில் இணைந்த வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் திருச்சியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மதியம் சுமார் 12.30 மணிக்கு மன்சூர் தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக புறப்பட்டார். அப்போது ஊர்வலத்தில் வந்த சைக்கிள் ரிக்சாவை சிறிது தூரம் ஓட்டி நூதன முறையில் பிரசாரம் செய்தார்.
பின்னர் திருச்சி தொகுதி தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான சவுண்டையாவிடம் பூர்த்தி செய்த வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவரது வக்கீலும், அவரது பெயரை முன்மொழிபவர்களும் உடன் இருந்தனர்.
அவரது வேட்புமனுவை வாங்கி கொண்ட கலெக்டர் அதை ஆய்வு செய்தார். அதில் முன்மொழியும் 10 வாக்காளர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் இருக்கும் பாகம் எண், வரிசை எண் போன்ற விவரங்கள் குறிப்பிடப்படாமல் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரது வேட்புமனு அவரிடமே திருப்பி கொடுக்கப்பட்டது.
மீண்டும் தாக்கல் செய்யலாம்...
இதுபற்றி கலெக்டர் சவுண்டையா கூறுகையில், மன்சூர் அலிகான் கொடுத்த வேட்பு மனுவில் முன்மொழிபவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருக்கும் பாகம் எண், வரிசை எண் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படாததால் ஏற்கப்படவில்லை. அவர் உரிய விவரங்களுடன் 24ம் தேதிக்குள் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்றார்.
இதனால் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.












Click it and Unblock the Notifications