பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை-பவார்
டெல்லி: நான் பிரதமர் பதவிக்குப் போட்டியிடவில்லை. நான் அவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க எனது கட்சி அனுமதிக்காது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
பிரதமர் பதவிக்கான ஆசையை பலமுறை வெளிப்படுத்தி வருபவர் சரத் பவார். இப்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இவரை பிரதமராக்கலாம் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கூறியுள்ளார். இதன்மூலம் மூன்றாவது அணியில் குழப்பத்தை உருவாக்கியுள்ளார்.
அந்த அணியில் இடம் பெற்றுள்ள உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதியை பிரதமர் பதவிக்கு பெரும்பாலான கட்சிகள் முன்னிருத்தும் நிலையில் அதை குலைக்கவே அந்த அணியில் இருந்து கொண்டே பவாருக்கு கொடி பிடித்துள்ளார் ஜெயலலிதா.
இதையடுத்து குழப்பத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் பிரதமர் பதவி தங்களுக்குத் தரப்பட்டால் அதைப் பரிசீலிக்கத் தயார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.
இந் நிலையில் சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையாக, நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை. அவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க எனது கட்சி என்னை அனுமதிக்காது. ஆசைகள் இருக்கலாம், ஆனால், அந்த ஆசை நிறைவேறுமா என்று யோசித்துப் பார்த்தே எந்த முடிவையும் எடுக்க வேண்டும். நாங்கள் வெறும் 40 இடங்களில் தான் போட்டியிடுகிறோம். இதி்ல் பிரதமர் பதவிக்கு நான் குறி வைப்பேனா?.
காங்கிரஸ் கூட்டணி வென்றால் மன்மோகன் சிங்கே பிரதமராகலாம். ஆனால், இதில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்று பவார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications