நான் உங்க கூடத்தான் இருக்கேன்-பிரணாபிடம் லாலு
ஹவுரா (மேற்கு வங்கம்): அரசியல் என்றாலே காமெடி என்றாகி விட்டது. என்ன வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எப்போது வேண்டுமானாலும் எந்த நிலையை வேண்டுமானாலும் எடுக்கலாம். அதற்கு சரியான உதாரணம் லாலு பிரசாத் யாதவ்.
இவர் ஒரு தேர்ந்த நடிகரைப் போல. சில நேரம் ஹீரோவாக தெரிவார். சில நேரம் செமத்தியாக காமெடி செய்வார். சில நேரம் வில்லனைப் போல நடந்து கொள்வார்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தூண்களில் ஒருவராக இருந்தார். ஆனால் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் சோனியா காந்திக்கும், காங்கிரஸுக்கும் பெரும் ஆப்பைக் கொடுத்தார் லாலு.
3 சீட் மட்டுமே பீகாரில் காங்கிரஸுக்கு ஒதுக்கி கட்சியை கடுப்படித்தார். இதனால் அங்கு காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
அத்தோடு நில்லாமல் முலாயம் சிங்குடன் இணைந்து நான்காவது அணியை உருவாக்கினார் லாலு.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மன்மோகன் சிங்கை மீண்டும் பிரமதராக ஏற்க முடியாது என்று அதிரடியாக அறிவித்தார் லாலு.
இதனால் அவர் மீதான காங்கிரஸின் கடுப்பு மேலும் மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று திடீரென பிரணாப் முகர்ஜியை தொடர்பு கொண்டார் லாலு. அப்போது பிரணாபிடம், நான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட்டு விலக வில்லை என்று கூறியுள்ளார்.
அவசரம் அவசரமாக பிரணாபை லாலு தொடர்பு கொண்டு பேசியதற்கு முக்கிய காரணம், பீகார் மாநிலம் சமஸ்டிபூரில் நடந்த கூட்டத்தில் பிரணாப் பேசுகையில், வாசலில் கிடக்கும் மிதியடி போல காங்கிரஸை நினைக்கிறார் லாலு. இப்படிப்பட்டவரை கூட்டணியில் வைத்துக் கொண்டிருப்பது முடியாத காரியம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் பிரணாபை போனில் பிடித்து உங்களுடன்தான் நான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் லாலு.
இதுகுறித்து பிரணாப் கூறுகையில், மத்தியில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமைய நான் உறுதுணையாக இருப்பேன். உங்களுடன்தான் இருப்பேன் என்று லாலு கூறினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட்டு விலகவில்லை என்றும் அவர் தெரிவித்தார் என்றார்.