இலங்கை தாக்குதல் தீவிரம் - டாக்டர் உள்பட 473 தமிழர்கள் பலி
வன்னி: விடுதலைப் புலிகளுக்கு விடுக்கப்பட்ட கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு வளையப் பகுதியில் நேற்று நடந்த தாக்குதலில் ஒரு டாக்டர் உள்பட 473 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 722 பேர் காயமடைந்துள்ளனர்.
வலைஞர்மடத்தில் நேற்று படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலில் உளநல மருத்துவர் சிவா மனோகரன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது அவர் குண்டு வீச்சில் பலியானார்.
மாத்தளன் பகுதியில் படையினர் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் சிக்கிய மக்களை முன்னிறுத்தி நேற்று பெரும் தாக்குதல் நடந்தது.
இத்தாக்குதலின் போது படையினர் எறிகணை மற்றும் நச்சுப் புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.
மாத்தளன், பொக்கணை, இடைக்காடு, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீதும் சிறிலங்கா படையினர் நேற்று தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையில் அந்த அந்த இடங்களில் படுத்திருந்தவாறு அவலக்குரல்களை எழுப்பினர்.
இதற்கிடையே, மக்கள் பாதுகாப்பு வளையப் பகுதியில் உணவுக்கு பெரும் நெருக்கடி நிலையேற்பட்டுள்ளது.
படையினரின் அகோரத் தாக்குதல்களினால் மக்கள் அச்சமடைந்து உணவுப்பொருட்களும் இல்லாத நிலையில் மிகவும் களைப்படைந்து காணப்படுகின்றனர்.