மதுரை: அனுமதியில்லா தேர்தல் அலுவலகங்கள்!
மதுரை: மதுரையில் திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பலர் தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெறாமல் பல்வேறு இடங்களில் கட்சித் தேர்தல் அலுவலகம் அமைத்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
புகார்கள் குவிந்ததையடுத்து இது குறித்து நடடிவக்கை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி்யும் மாவட்ட கலெக்டருமான சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சி தேர்தல் அலுவலகம் அமைக்க சட்டப்படி அனுமதி பெற வேண்டும். அவ்வாறு பெறாமல் காரியாலம் அமைத்து அதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அகற்ற காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் அலுவலகம் அமைக்க அனுமதி கோரும் தனியாரது பெயர் மற்றும் எந்தக் கட்சிக்காக அமைக்கப்படுகிறது, தனியாருக்கு சொந்தமான இடமாக இருப்பின் உரிமையாளரிடமிருந்து ஒப்பந்த பத்திரம் மற்றும் தேவையான அனைத்து விவரங்களும் காவல் துறையினரால் பெறப்படும்.
ஒரு கட்சி அலுவலகத்திற்கு மற்றொரு கட்சி அலுவலகத்திற்கும் குறைந்தபட்சம் 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
ஏற்கனவே அமைந்துள்ள அலுவலகத்திற்கு அனுமதி பெறாமல் இருப்பின் 48 மணி நேரத்திற்குள் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாப்படாத அலுவலகங்ளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தேர்தல் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு கட்சி சார்பில் பரிசு பொருட்கள் ஏதும் வழங்கக் கூடாது. மேலும் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறக்கூடாது.
எக் காரணம் கொண்டும் பொது இடங்களில் தேர்தல் அலுவலகங்கள் வைக்க அனுமதி இல்லை. அரசு, தனியார் இடங்களை ஆக்கிரமித்து தேர்தல் அலுவலகங்கள் அமைக்கக்கூடாது.
மேலும், மதத்தோடு தொடர்புடைய இடங்களின் வளாகங்களில் கல்வி நிறுவனம் மற்றும் மருத்துவமனை அருகில் மற்றும் வாக்குச்சாவடி அமைந்துள்ள 200 மீட்டர் எல்லைககுள் தேர்தல் அலுவலகம் அமைக்க கூடாது.
தேர்தல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட கட்சியின் ஒரு கொடி மற்றும் பேனர் மட்டுமே அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைப்படும் பேனர்கள் 4 அடி, 8 அளவில் இருக்க வேண்டும். வெளி நபர்கள் எவரும் அஙகு இருக்கக்கூடாது.
நகர்ப் பகுதியாக இருப்பின் காவல்துறை ஆணையரிடமும், ஊரகப் பகுதியாக இருப்பின் காவல்துறை கண்காணிப்பாளரிடமும் அனுமதி பெற்றே தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.