டம்மி' வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு!
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் டம்மி' வேட்பாளர்களாக செயல்பட்டு தேர்தல் ஆணையத்தின் சலுகைகளை தவறாக பயன்படுத்துவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தா எச்சரித்துள்ளார்.
இது குறித்து நரேஷ் குப்தா வெளியிட்ட அறிக்கையில்,
வரும் நாடாளுமன்ற தேர்தலில் சில அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தங்கள் தரப்பில் 'டம்மி' வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாக தெரிகிறது. வேட்பாளர் என்ற பெயரில் நிறுத்தப்படும் டம்மி வேட்பாளர்கள், தங்களுக்குள்ள உரிமைகளை பயன்படுத்தி வாகன அனுமதி உட்பட பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொள்கிறார்கள்.
பின்னர் தன்னை நிறுத்திய கட்சி அல்லது வேட்பாளருக்காக பிரசாரம் செய்வதற்கு இவற்றை பயன்படுத்தி கொள்வார். இதன்படி அந்த வேட்பாளருக்கு 2 தரப்பில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். அதன்மூலம் தேர்தல் செலவு உச்சவரம்பு மீறப்பட்டு வருகிறது.
தேர்தல் அன்றும், ஓட்டு எண்ணிக்கையின் போதும் தனக்கு தரப்பட்டுள்ள வாகன அனுமதி, தேர்தல் ஏஜெண்டுகள் உள்ளிட்ட பல சலுகைகளை, தன்னை நிறுத்திய வேட்பாளர் அல்லது கட்சிக்காக 'டம்மி' வேட்பாளர் பயன்படுத்தி கொள்வார்.
பிரசாரம் வீடியோ எடுக்கப்படும்...
எனவே தேர்தல் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் மிகுந்த விழிப்பாக இருந்து, வேட்பாளர்கள் யாரும் 'டம்மி'யாக செயல்படுகிறார்களா என்பதை கண்டறிய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. 'டம்மி'யாக யாராவது செயல்படுவதாக சந்தேகம் எழுந்தால், அவர்கள் மேற்கொள்ளும் பிரசாரத்தை வீடியோ மூலம் படம் பிடிக்க வேண்டும்.
வீடியோ படங்கள், பிரசார பதிவுகள், அவர்களை பற்றி மற்றவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும்.
வாகன அனுமதி ரத்து...
பின்னர் அந்த வேட்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள வாகன அனுமதி உள்ளிட்ட சலுகைகளை அவர் உண்மையில் எப்படி பயன்படுத்துகிறார் என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.
வாகன சலுகைகள் தவறாக பயன்படுத்துவது நிரூபணமானால், வாகன அனுமதி தருவதற்கான நோக்கம் நிறைவேறவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில், அவருக்கு தரப்பட்ட வாகன அனுமதியை தேர்தல் அதிகாரி திரும்பப்பெற வேண்டும். இப்படிப்பட்ட டம்மி வேட்பாளர்களை மக்கள் மத்தியில் நன்றாக அடையாளம் காட்ட வேண்டும்.
இதுதவிர இந்திய தண்டனை சட்டம் 171 (எச்) பிரிவின் கீழ் தேர்தலில் சட்டத்துக்கு முரணாக நடந்து கொண்ட காரணத்துக்காக அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வேட்பாளருக்கு நோட்டீஸ்...
எந்த வேட்பாளருக்காக பிரசாரம் செய்தாரோ, அந்த வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் 'டம்மி' வேட்பாளர் செய்த செலவுகளையும் சேர்க்கும்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.