கருணாநிதியை வரலாறு என்றும் மன்னிக்காது: ஜெ

இலங்கையில் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
மிருக வெறியில் இலங்கை ராணுவம்..
இலங்கையில் பாதுகாப்பு வளையத்தில் சிக்கி இருக்கும் தமிழர்கள் அனைவரையும் இலங்கை ராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது. தப்பி ஓடுபவர்களை எல்லாம் இலங்கை ராணுவம் விரட்டி அடித்துக் கொல்கிறது. அங்கே தமிழ் இனமே அழிந்து கொண்டிருப்பதாக கவலை அளிக்கும் செய்தி நாள்தோறும் வந்து கொண்டிருக்கிறது.
இதுபோன்ற இனப்படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.
தைரியம் இல்லாத கருணாநிதி...
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், தெளிவான முடிவை முதல்வர் கருணாநிதி தைரியமாக எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
உலகெங்கும் வாழும் தமிழர்கள், இலங்கை தமிழர்களுக்காக தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றனர். பல நாடுகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடைபெற்று வருகின்றன.
நிமிடத்திற்கு ஒரு பேச்சு பேசுகிறார்...
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில், இந்த இக்கட்டான நேரத்தில் கூட உடனடி நடவடிக்கை எதையும் எடுக்காமல், நிமிடத்திற்கு ஒரு பேச்சு பேசிக் கொண்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் தந்தி கொடுப்பது தான் கருணாநிதிக்கு தெரிந்த ஒரே தீர்வு போலும்.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் இந்த நிமிடத்தில் நமது ஒரே முழக்கம். இதற்கு அங்கே போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அதை இந்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும். அதற்கு தமிழக முதல்வரின் பங்கு என்ன? என்பதுதான் எல்லோரும் கேட்கும் கேள்வி.
வரலாறு எப்படி மன்னிக்கும்...
இந்த நேரத்திலாவது கருணாநிதி, ஒரு முதலமைச்சராக செயல்பட்டு மத்திய அரசை நிர்பந்தித்து எஞ்சியுள்ள தமிழர்களையாவது காப்பாற்ற முன்வராவிட்டால் வரலாறு எப்படி அவரை மன்னிக்கும்? என்று அவர் கூறியுள்ளார்.
இந் நிலையில் சிஎன்ன்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழர்கள் இலங்கை அரசு எந்தக் காலத்திலும் சமமான பிரஜைகளாக நடத்தியதில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications