கருணாநிதி மாற்றி மாற்றி பேசுவார்..விஜய்காந்த்
ராசிபுரம்: எல்லா விஷயங்களிலும் முதல்வர் கருணாநிதி மாற்றி, மாற்றி முன்னுக்குபின் முரணாகவே பேசுகிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் மகேஸ்வரனை ஆதரித்து ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே பிரச்சாரம் செய்த விஜய்காந்த் கூறுகையில்,
ராசிபுரத்தை நினைக்கும்போது 'என் ஆசை மச்சான்' படத்தில் வரும் "ராசிதான் நல்ல கைராசிதான் உன் முகமே ராசிதான்.." பாட்டு தான் நினைவுக்கு வருகிறது. ஆனால், ராசிபுரத்தையே குட்டிச் சுவராக்கிவிட்டார் கலைஞர். மின்சாரத் தடையால் ராசிபுரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலை இழந்துள்ளனர்.
நாட்டில் எது எதுக்கோ லீவு விடுகிறார்கள். ஆனால் உலகத்திலேயே கரண்ட்டுக்கு லீவு விடுற ஒரே முதல்வர் கலைஞர்தான். எல்லா மில்களையும் மூடி கொண்டு உள்ளனர். கரண்ட் கொடுக்காத ஒருவருக்கு நீங்கள் வாக்களிக்கலாமா? நீங்கள் சிந்தியுங்கள்.
மழையிலும் இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறீர்கள். அதற்கு நன்றி. இங்கு கூடி இருக்கிற கூட்டம் எல்லாம் (மக்கள்) ஓட்டு போட்டால் என் வேட்பாளர் ஜெயித்து விடுவார். இன்னா 40 இனியவை 40 என்று கலைஞர் கூறினார். இன்னா என்றால் தீமை செய்யும் கட்சி. இனியவை என்றால் திமுக என்றார் கலைஞர்.
ஏற்கனவே 40 இடங்கள் கொடுத்து 5 ஆண்டுகளில் கலைஞர் என்ன செய்தார் என்பதை பொதுமக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். கலைஞர் வார்த்தையை மாற்றி மாற்றி பேசுவார்.
இனியவை 40 என்று கூறினார். மறுநாள் 30 ஜெயிப்போம் என்றார். அடுத்த நாளே 10 சீட்டு காணாமல் போய் விட்டது. கூட்டணி பற்றி கேட்டால் ஒரு விளக்கு இருந்தால் போதும் எல்லா விளக்குகளையும் ஏற்றிவிடலாம் என்கிறார். இப்படித்தான், முன்னுக்குபின் பேசுவார் கலைஞர்.
சென்னையில் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது கலைஞர் காவல்துறையும், நீதித்துறையும எனக்கு 2 கண்கள் மாதிரி என்றார். 2 கண்கள் என்றால் பார்வை டபுள் டபுள் ஆகவா தெரிகிறது. ஒரே பார்வைதானே.
கருணாநிதி நியாயத்தின் பக்கம் இருப்பேன் என்பார். எந்த பக்கம்? நீதித்துறையின் பக்கமா? காவல்துறை பக்கமா? என்று சொல்லலாம் அல்லவா? சாதகமாக தீர்ப்பு சொன்னால் ஒரு மாதிரி, பாதகமாக தீர்ப்பு சொன்னால் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல இது, வாங்கப்பட்ட தீர்ப்பு என்பார்.
பிரபாகரனை தீவிரவாதி என்றார். மறுநாள் பத்திரிகையாளர்கள் கேட்டபோது நான் அப்படி கூறவில்லை என்று கூறிவிட்டார். இப்படி எல்லா விஷயத்திலும் மாறி, மாறி முன்னுக்குப் பின் முரணாகவே பேசி வருகிறார் என்றார் கருணாநிதி.