நீலகிரி மதிமுக வேட்பாளர் கிருஷ்ணன் மீது வழக்கு
நீலகிரி: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நீலகிரி மதிமுக வேட்பாளர் கிருஷ்ணன் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் கிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் நேற்று மாவட்ட கலெக்டரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின் போது, ஆட்சியர் அலுவலகத்துக்குள் வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதை மீறி வேட்பாளர் கிருஷ்ணனுடன் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் உள்ளே சென்றனர்.
மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆட்சியர் அலுவலகத்திலேயே பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த போலீசாருடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து போலீசார் மதிமுக வேட்பாளர் கிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 50 பேர் மீது தேர்தல் விதிமுறைகள் மீறியதாக வழக்கு பதிவு செய்தனர்.