இலங்கை: காங் அறிக்கை விடுமாம்..கருணாநிதி வரவேற்பாராம்
டெல்லி & சென்னை: இலங்கையில் போரை நிறுத்துமாறு காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டு தனது 'கடமையை' முடித்துக் கொண்டுள்ளது. இதை உடனே முதல்வர் கருணாநிதி வரவேற்று அறிக்கை விட்டுள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், வெளியுறவுத்துறை இணையமைச்சருமான ஆனந்த் சர்மா ஒரு அறி்க்கையை வெளியிட்டார். அதில்,
இலங்கையில் சீரழிந்து வரும் மனிதாபிமான சூழ்நிலை குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான தமிழர்கள், ஆணும், பெண்ணும், குழந்தைகளும் போரில் சிக்கித் தவிக்கிறார்கள். ஒன்றுபட்ட இலங்கையின் கட்டமைப்புக்கு உட்பட்டு, தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் சட்டப்பூர்வ விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதை இந்திய தேசிய காங்கிரஸ், எப்போதும் ஆதரிக்கிறது.
இந்த தீர்வுக்கான அடிப்படை அம்சம், மறைந்த ராஜீவ் காந்தியால் உருவாக்கப்பட்டது. அது 1987ம் ஆண்டு கையெழுத்தான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது.
விடுதலைப்புலிகளுடன் சண்டை நடந்து வரும் பகுதியில், தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பை சாத்தியமான எல்லா வழிகளிலும் உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசை இந்திய தேசிய காங்கிரஸ் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
ஆகவே, இலங்கையில் போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு இலங்கை அரசை இந்திய தேசிய காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது. இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ ரீதியாக அல்லாமல், ஜனநாயக மற்றும் அரசியல் வழிமுறையில்தான் நிரந்தர தீர்வு காண்பது சாத்தியம் என்பதில் இந்திய தேசிய காங்கிரசுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கண்டு வேதனைப்படுகிறோம். தமிழர்களை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஏற்கனவே இலங்கை அரசிடம் கூறியிருக்கிறோம்.
இலங்கைக்கு மருத்துவ குழுவையும், மருந்துகளையும் அனுப்பி இருக்கிறோம். 60,000 உணவு தானிய பொட்டலங்கள் அனுப்பி இருக்கிறோம். மேலும் 40,000 பொட்டலங்கள் அனுப்பத் இருக்கிறோம்.
விடுதலைப் புலிகளையும், தமிழர்களையும் ஒரே மாதிரி பார்ப்பது சரியல்ல. விடுதலைப் புலிகள் இயக்கம், ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். இப்போதுள்ள நிலைமையில், இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பில்லை என்றார்.
காங்கிரஸ் இதைச் சொல்லக் கூட ஒரு தேர்தல் நெருங்கி வர வேண்டியுள்ளது.
கருணாநிதி வரவேற்பாராம்...
இவ்வாறு காங்கிரஸ் தமிழர்களைக் காக்க ஒரு அறிக்கையை வெளியிட்டவுடன் இதை முதல்வர் கருணாநிதி வரவேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நமது இந்த இடைவிடா முயற்சியின் விளைவாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, காங்கிரஸ் இயக்கத்தின் சார்பாக வெளியிட்டுள்ள- இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் அறிக்கை நமக்கு ஆறுதல் வழங்குகிறது. அதற்காக தமிழ் மக்களின் சார்பாக நன்றியைக் குவிக்கிறேன்.
இந்த அறிக்கைக்கு பிறகாவது சிங்கள அரசு உடனடியாக நிரந்தர போர் நிறுத்தத்தை அறிவிக்குமென்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications