புலிகள் குறித்து பேச விரும்பவில்லை-பிரியங்கா
டெல்லி: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தோ, அதுகுறித்து முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கள் குறித்தோ கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பிரியங்கா அளித்துள்ள பேட்டி..
ராஜீ்வ் காந்தி படுகொலைக்கு இன்னும் நாங்கள் முழுமையான நீதியைப் பெறவில்லை என்று சகோதரர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் எனக்கும், ராகுலுக்கும் இடையே சிறிய அளவில் வேறுபாடு உள்ளது.
எனக்கு ராகுலைத் தெரியும். அவருடைய மனதில் எந்தக் கோபமும் இல்லை. எந்த வெறுப்பும் இல்லை. நீதி கிடைக்க நாளாகி விட்டதே என்ற ஏக்கத்தைத்தான் தனது வார்த்தைகளில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
எந்த தனி நபரிடமிருந்தும் நான் நீதியை எதிர்பார்க்கவில்லை. இந்த உலகம்தான் நீதியைத் தர வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் பட்ட வேதனையை விட, நளினி நிறையவே அனுபவித்துள்ளார். ஆனால் அவராக அந்த வேதனையை தேடிக் கொள்ளவில்லை. சூழ்நிலை அவரை வேதனைப்படுத்தி விட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து முதல்வர் கருணாநிதி சில கருத்துக்களைக் கூறியுள்ளார். அந்த இயக்கம் தீவிரவாத இயக்கமாக தொடங்கப்படவில்லை என்று கூறியுள்ளார். அது அப்போது, இது இப்போது. தனது பேச்சை பின்னர் அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.
என்னைப் பொறுத்தவரை இவை அரசியல் சார்ந்தவை, தனிப்பட்ட முறையிலானவை. எனவே இதுகுறித்து நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றார் பிரியங்கா.
சீக்கியர் கலவரத்தில் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று சீக்கிய சமூகத்தினர் கூறுவது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். அது சரியானதாகவே இருக்கும். அதற்கு மேல் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.