ராணுவத் தாக்குதல் ஓயவில்லை - நேற்று 324 தமிழர்கள் படுகொலை - பாதிரியார் படுகாயம்
வன்னி: இலங்கை ராணுவத்தின் கோர கொலை வெறி இனவெறித் தாக்குதல் இன்னும் ஓயவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று நடந்த தாக்குதல்களில் 324 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு சர்ச் குண்டு வீசித் தகர்க்கப்பட்டது. பாதிரியார் உள்பட 423 பேர் காயமடைந்துள்ளனர்.அம்பவலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் நேற்று இலங்கைப் படைகள் தாக்குதல் நடத்தின.
இதில் வலைஞர் மடத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது குண்டு வீசித் தாக்கப்பட்டது. அங்கிருந்த 6 பேர் கொல்லப்பட்டனர். பாதிரியார் ஜேம்ஸ் பத்திநாதர் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.
வலைஞர் மடத்தில் உள்ள மருத்துவமனை முற்றிலும் சேதமடைந்தது. நேற்று நடந்த தாக்குதல்களில் மட்டும் 324 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்து முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 1700 பேர் நிலை மிக மோசமாக உள்ளது.
இவர்களை அங்கிருந்து மீட்டு வேறு பகுதிக்குக் கொண்டு செல்ல வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கிரீன் ஓசன் கப்பலை வர விடாமல் இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தின. இதனால் கப்பல் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வராமல் திரும்பிச் செல்ல நேரிட்டது.
பின்னர் பல மணி நேரம் கழித்து கப்பல் மீண்டும் வந்தது. சிறு படகுகள் மூலம் 354 நோயாளிகளை ஏற்றி கப்பலுக்குக் கொண்டு சென்றனர்.