'ஓட்டு வாங்க பந்த் நடத்தும் கருணாநிதி!'- விஜய்காந்த்
கள்ளக்குறிச்சி: இலங்கை பிரச்சனையை வைத்து ஓட்டு வாங்குவதற்காக முதல்வர் கருணாநிதி பந்த் நடத்துகிறார் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தனது மச்சான் சுதீசை ஆதரித்து அவர் பிரசாராம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஏற்காட்டில் இப்போது குடிநீர் இல்லை என்று கூறுகிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காட்டில் பல படங்கள் சூட்டிங் எடுப்பதற்காக வந்துள்ளேன். அப்போது அன்றைய சூழ்நிலை நன்றாக இருந்தது. ஏற்காட்டில் இருந்த அனைத்து சந்தன மரங்களும் மற்றும் மரங்களையும் வெட்டி அழித்து விட்டனர்.
அண்ணாவின் இதயத்தை இரவல் வாங்கி வந்தேன் என்று சொன்னவர் கலைஞர். இன்று அது எங்கே?. இன்று மஞ்சள் துண்டு அணிந்து மக்களை ஏமாற்றி வருகிறார்.
கலைஞர் மஞ்சள் துண்டை தூக்கி போட முடியுமா?, முடியாது. காரணம் அவரது வலது கையில் சிவப்பு மோதிரமும், மஞ்சள் துண்டும் அணிந்திருந்தால் உங்களுக்கு மக்கள் சக்தி அதிகம் இருக்கும் என்று ஜோதிடர் கூறியுள்ளார். அதனால் தான் அவரால் மஞ்சள் துண்டை தூக்கி போட முடியவில்லை.
இலங்கை பிரச்சனையை வைத்து ஓட்டு வாங்குவதற்காக முதல்வர் கருணாநிதி பந்த் நடத்துகிறார். அவர் நினைத்தால் டெல்லி சென்று சோனியாவை சந்தித்து போரை நிறுத்த வலியுறுத்தலாமே? என்றார்.