மாற்று வழியில் சேது திட்டம்-அன்புமணி
ஸ்ரீபெரும்புதூர்: சேது சமுத்திரம் திட்டத்தை நிச்சயமாக வரவேற்கிறோம். இந்த திட்டத்தை எந்த வழியில் நிறைவேற்றினால், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றது என்று ஆராய்ந்து வருகிறோம். மாற்று பாதையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றால் அதை நிறைவேற்றுவோம் என பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமக வேட்பாளர் ஏகே மூர்த்தி மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேற்று அய்யப்பன்தாங்கலில் பிரசாரம் செய்தனர்.
அப்போது அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில்,
இந்த ஆட்சியில் மின்சார வெட்டு, மணல் கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல் போன்றவை நடைபெறுகின்றன. 60 லட்சம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். உலக பொருளாதார பாதிப்பால், மேலும் பல லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த அரசு மீது மக்கள் கோபமாக இருக்கிறார்கள்.
சேது சமுத்திரம் திட்டத்தை நிச்சயமாக வரவேற்கிறோம். அதை எப்படியாவது நிறைவேற்ற முயற்சிப்போம். அந்த திட்டத்தை நிறைவேற்ற என்ன வழி இருக்கிறது? என்று ஆராய்ந்து பார்த்து நிறைவேற்றப்படும்.
சேது சமுத்திரம் திட்டத்தை எந்த வழியில் நிறைவேற்றினால், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றது என்று பார்த்து, மாற்று பாதையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றால், அதை செய்வோம்.
நில பிரச்சினைகளை தீர்ப்போம்...
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வசிக்கும் ஏராளமான மக்களின் வீடுகள், விளை நிலங்கள், விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அந்த நிலத்தை சில தனியாருக்கு அரசு கொடுத்து விட்டது. இந்த பிரச்சினைகளை நாங்கள் நிச்சயம் தீர்ப்போம்.
பல இடங்களில் திமுகவினர், மகளிர் சுய உதவிக்குழுவினரை விலைக்கு வாங்கி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.இதுபற்றி, தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் விசாரித்து வருகிறார்கள். மக்களை நேரடியாக சந்திக்க முடியாமல், கோழைத்தனமான செயல்களால் திமுக வெற்றி பெற முடியாது என்றார் அன்புமணி.