தமிழர்களுக்கு உதவ பிரிட்டனுடன் கூட்டு நடவடிக்கை: பிரான்ஸ் விருப்பம்

இதுகுறித்து பாரீஸில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் கொச்னர் கூறுகையில், இங்கிலாந்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட்டுடன் பேசியுள்ளோம்.
போர்க்களத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டிலிருந்து படகுகளை அனுப்ப முடியும். தற்போது தமிழர்கள் கடற்கரைகளில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களில் பலர் கடல் மார்க்கமாக தப்ப முயன்று கடலில் மூழ்கும் அபாயமும் உள்ளது.
இருப்பினும் ராணுவ ரீதியாக இலங்கை விவகாரத்தில் தலையிடும் எண்ணம் எங்களிடம் இல்லை. அந்த திட்டத்திற்கு நாங்கள் வரவில்லை என்றார்.
புலிகள் சரணடைய கோரிக்கை
இதற்கிடையே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரெஞ்சு தூதர் ஜீன் மாரிஸ் ரிபெர்ட் கூறுகையில், விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்து வருகிறார்கள். எனவே அவர்கள் சரணடைய வேண்டும். தங்களிடம் உள்ள அப்பாவி மக்களை விடுவிக்க முன்வர வேண்டும்.
மனிதக் கேடயங்களாக அப்பாவிகளை வைத்திருப்பதை ஏற்க முடியாது. அவர்கள் உடனடியாக சரணடைந்து தங்கள் வசம் உள்ள அப்பாவிகள் வெளியேற உதவ வேண்டும்.
அதேசமயம், உலக நாடுகள் பலமுறை கோரியும் கூட இலங்கை அரசு போரை நிறுத்தாமல் அப்பாவிகளை கொன்று வருவது கண்டனத்துக்குரியது என்றார்.
விஜய் நம்பியார் விளக்கினார்..
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பான் கி மூனின் பிரதிநிதியாக கொழும்பு சென்று வந்த விஜய் நம்பியார் இலங்கை நிலவரம் குறித்து விளக்கிக் கூறினார்.
முன்னதாக இக்கூட்டத்தில் விளக்கமளிக்க அவர் மறுத்து விட்டார். இருப்பினும் உறுப்பினர் நாடுகள் கடுமையாக வலியுறுத்தியதைத் தொடர்ந்து விஜ்ய நம்பியார் தனது நிலையிலிருந்து இறங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications