மே.வங்கத்தில் 2 சிபிஎம் தலைவர்கள் சுட்டு கொலை
புரூலியா (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலம் பலராம்பூர் பகுதியில், இரண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களை மாவோ தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
சுபுர்திர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. பிபூதி சிங் சர்தார் மற்றும் பைகுந்தா மஹதோ ஆகிய அந்த இரு தலைவர்களும், நேற்று இரவு 11 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் இரு தலைவர்களையும் மிக நெருக்கத்தில் வைத்து சரமாரியாக சுட்டு விட்டுத் தப்பினர்.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்.
சுட்டுக் கொன்ற நபர்கள், போகும்போது மாவோ இயக்கத்தினருக்கு ஆதரவாக கோஷமிட்டு விட்டுப் போயுள்ளனர். எனவே அவர்கள் மாவோ நக்சலைட் தீவிரவாதிகளாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து பலராம்பூரில் 12 மணி நேர பந்த்துக்கு சிபிஎம் அழைப்பு விடுத்துள்ளது.
பதட்டம் நிலவுவதாலும், இப்பகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்ய வருவதாலும் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.