நளினி விடுதலை கோரும் மனு-தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து இரு தரப்பும் தாக்கல் செய்த பதில் மனுவில், இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் அந்தத் தீர்ப்பை வேறு எந்தக் கோர்ட்டும் பரிசீலிக்க முடியாது என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிபதிகள் எலிபி தர்மாராவ், செல்வம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் கூடுதல் பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.
அப்போது இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை நீதிபதிகள் நிராகரித்தனர்.
மேலும், இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்தனர்.