அமேதி-45% வாக்குகளே பதிவு-பிரியங்கா சோகம்
லக்னோ: உ.பி. மாநிலத்தில் சகோதரர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் குறைந்த அளவிலான வாக்குகளே பதிவானதால் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேரா இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டாராம்.
ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி, அம்மா சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் சுற்றிச் சுற்றி வந்து பிரசாரம் செய்தார் பிரியங்கா.
தன்னுடன் தனது மகள், மகனையும் கூட அழைத்துக் கொண்டு ராகுலுக்காக ஓட்டு வேட்டையாடினார். அம்மாவை விட ராகுல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும் என அமேதி தொகுதி வாக்காளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்து வந்தார்.
ஆனால் நேற்று முன்தினம் நடந்த 2வது கட்ட வாக்குப் பதிவின்போது அமேதி தொகுதியில் 45 சதவீத வாக்குகளே பதிவாகியது பிரியங்காவை அப்செட்டில் ஆழ்த்தி விட்டதாம். அன்று இரவெல்லாம் தூங்கவே முடியாமல் தவித்ததாக கூறியுள்ளார் பிரியங்கா.
பிரியங்கா காந்தி மட்டுமல்லாமல் சோனியாவும் கூட மிகக் குறைந்த வாக்கு சதவீதம் குறித்து அப்செட் ஆகியுள்ளாராம். இதை எதிர்பார்க்கவே இல்லை என்று சோனியா கூறினாராம்.
குறைந்த அளவிலான வாக்குகளே பதிவாகியுள்ளதால், பெரும் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெல்லும் வாய்ப்பு போய் விட்டது.
இதுகுறித்து பிரியங்கா கூறுகையில்,முதல் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்தவுடன் என்னால் நம்ப முடியவில்லை. இரவெல்லாம் என்னால் தூங்க முடியவில்லை. இருப்பினும் தற்போது 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதனால் சற்று நிம்மதியாக உள்ளது என்றார்.
கடந்த 2004ம் ஆண்டு தேர்தலிலும் கூட அமேதியில் 45 சதவீத வாக்குகள்தான் பதிவாகியது. அப்போது ராகுல் காந்தி 2.90 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications