பிரதமர் பதவி: அத்வானிக்குப் பின் மோடி தான்..பாஜக
முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அருண் ஷோரி கூறுகையில்,
முதல்வராக மிகச் சிறப்பாக செயல்பட்டு குஜராத்தை முன்னேற்றியிருக்கிறார் மோடி. அவர் பிரதமராக வேண்டும். இந்தத் தேர்தலில் அல்ல, அடுத்த தேர்தலில். இந்தத் தேர்தலில் அத்வானியை பிரதமராக்கும் வாய்ப்பு மோடிக்குக் கிடைத்துள்ளது.
குஜராத்தை ஒரு மாதிரி மாநிலமாக்கிய மோடிக்கு பிரதமராக எல்லா தகுதியும் உள்ளது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றார்.
ஷோரியின் இந்தப் பேச்சு குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்திடம் கேட்டபோது,
அத்வானிக்குப் பிறகு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. அவர் ஒரு சிறந்த தலைவர். கடுமையான உழைப்பாளி. எனவே, அவரை அடுத்த பிரதமர் பதவி வேட்பாளர் என்று தெரிவிப்பதில் பெருமைப்படுகிறோம்.
அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டால் அதை கட்சிதான் முடிவு செய்யும். இது காங்கிரஸ் அல்ல, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பரம்பரை பரம்பரையாக பிரதமர் ஆவதற்கு என்றார்.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் மத்திய அமைச்சருமான கபில் சிபலிடம் கேட்டபோது, முதலில் அத்வானி பிரதமர் ஆகிறாரா என்று பார்ப்போம். அதுவே நடக்கப் போவதில்லை. அதற்குள் அடுத்த பிரதமரை தயார் செய்துவிட்டார்கள். முதலில் அத்வானி 'லைனை க்ளியர்' செய்யட்டும் என்றார்.