ராணுவத் தாக்குதலில் நேற்று 197 தமிழர்கள் படுகொலை
வன்னி: இலங்கை ராணுவத்தின் தாக்குதல் வெறி சற்றும் குறையவில்லை. நேற்று நடந்த கொலை வெறித் தாக்குதலில் 197 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு ராணுவம் தாக்கி வருகிறது. இதனால் பலர் காயத்தால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வலைஞர்மடத்தில் நேற்று அதிகாலை முதல் அகோர எறிகணைத் தாக்குதல்களை இலங்கைப் படைகள் நடத்தின.
மக்கள் மத்தியில் கொத்து வெடிகுண்டுகள் விழுந்து வெடித்தன. வலைஞர் மடம் மாதா கோவிலைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த பயங்கர தாக்குதல் காரணமாக முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் பகுதிகளிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்து ஓடினர்.
அதேசமயம், இலங்கைக் கடற்படையினர் மறு முனையில் கப்பல்களிலிருந்து தரையை நோக்கி பீரங்கித் தாக்குதலை நடத்தினர்.
நேற்று மாலை 6 மணி முதல் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியான பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தொடர் தாக்குதல்களில் 197 தமிழர்கள் படுகொலையானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.