'ஆமாம் சாமி' போட்டு திரும்பிய மேனன்-நாராயணன்
கொழும்பு: இப்போது போர் நிறுத்தம் தேவையில்லேயே என்று ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபாய ராஜபக்சே கூறியதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு மேனனும், நாராயணனும் டெல்லி திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படு வேகமாக டெல்லியிலிருந்து கொழும்புக்குப் பறந்த மேனனும், நாராயணனும் போன வேகத்தில் டெல்லி திரும்பி விட்டனர். போர் நிறுத்தம் செய்க என்று அழுத்தம் திருத்தமாக ஒரு வார்த்தை கூட அதிபர் ராஜபக்சேவிடம் அவர்கள் கூறவில்லை.
எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார் கதையாக, நேராகவே போய் ராஜபக்சேவிடம் போய் பேசி விட்டு வந்தோம் என்று கணக்கு காட்டுவதற்காகவே இந்த பயணம் மேற்கொண்டதாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் கோதபாய ராஜபக்சே போர் நிறுத்தம் தேவையில்லை என்று மேனன், நாராயணனிடம் கூறியதாகவும், அதை ஏற்றுக் கொண்டு மேனனும், நாராயணனும் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அப்பாவித் தமிழர்களுக்கு சாதகமாக மேனனும், நாராயணனும் ஒரு வார்த்தை கூட ராஜபக்சேவிடம் பேசவில்லை என்றும், ராஜபக்சே கூறியதையெல்லாம் தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்திய - இலங்கை உறவு, போருக்குப் பின்னால் செய்ய வேண்டியது குறித்து பொத்தாம் பொதுவாகத்தான் இரு தூதர்களும் ராஜபக்சேவிடம் பேசினார்களாம்.
இந்த சந்திப்பின்போது உடன் இருந்த கோத்தபாய ராஜபக்சே, விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் ஒன்றை செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று கூறியதாகவும், அதை தலையாட்டி மேனனும், நாராயணனும் ஏற்றுக் கொண்டார்களாம்.
பிரபாகரனோ அல்லது விடுதலைப் புலிகளோ சரணடைந்தால் அல்லது பிடிபட்டால் எப்படி நடந்து கொள்வது, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் முக்கியமாக விவாதித்தார்களாம்.
கொழும்பு பயணத்தின்போது ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனியாக சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.