ஜெ. பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் - பதவியை அடைய ஆதரிப்போம்: ராமதாஸ்
சென்னை: பிரதமர் பதவிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முழுத் தகுதியும் உடையவர். அவர் பிரதமர் பதவிக்கு வருவதற்கு பாமக முழுமையாக ஆதரிக்கும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அடுத்த பிரதமராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு அனைத்து தகுதிகளும் உண்டு. எனவே அவர் பிரதமராக முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
எங்களுடைய கருத்தும் அதேதான். ஜெயலலிதா அடுத்த பிரதமராவதற்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம்.
கருணாநிதி பெயில் ஆகிவிட்டார் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அதைத்தான் ஒரு பத்திரிகையிலும் தெரிவித்துள்ளார்கள். சிறந்த செயல்பாடுள்ள முதல்வர்கள் பட்டியலில் கருணாநிதிக்கு 14வது இடம்தான் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் நல்லாட்சி நடக்கவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலையில்லாத் திண்டாட்டம், கட்டப்பஞ்சாயத்து, மணல் கொள்ளை போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அதிமுக கூட்டணியை ஆதரிக்க தயாராக உள்ளனர்.
ஆனால் திமுக கூட்டணியிலோ மோதல் ஏற்பட்டுள்ளது. அதற்கு எத்தனை ஒட்டுகள் போட்டாலும் அதிலுள்ள கட்சிகளின் தொண்டர்களை ஒட்ட வைக்க முடியாது.
இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது வரவேற்கத் தக்கது.
இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் கடும் பாதிப்பு ஏற்படும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்திருப்பது சரியானது. அதனை நான் வரவேற்கிறேன்.
அதிமுக கூட்டணியை பொறுத்த வரை நான் ஏற்கனவே கூறியதைப் போலவே 40 இடங்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இதற்கு இலங்கை பிரச்சனை முக்கிய காரணமாக அமையும்.
இலங்கையில் இருந்து பிரிந்து போகும் உரிமை ஈழத்தமிழர்களுக்கு உண்டு.
ஒரு இனம் தனி நாடு கோருவதற்கு சோவியத் யூனியனின் முதுபெரும் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ள 3 காரணங்களும் ஈழத்தமிழர்களுக்கு பொருந்தும்.
இலங்கையில் இனப்பிரச்சனையால் இதுவரை 2 லட்சம் தமிழர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் 6 ஆயிரத்து 500 தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டிருப்பதாக ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழம் அமைப்பதுதான் நிரந்தர தீர்வு என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்லப்போகிறார்.
பதவிக்காக கருணாநிதி எதையும் சமரசம் செய்துகொள்வார். ஈழத் தமிழர்களுக்காக பொது வேலை நிறுத்தம் என்று கருணாநிதி கபட நாடகம் ஆடினார். அதன் பின்னர் சிவசங்கர் மேனனையும், எம்.கே. நாராயணனையும் இலங்கைக்கு அனுப்பி வைத்து மேலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்.
அவர்கள் இருவரும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லை என்று கொழும்பிலும், டெல்லியிலும் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் கருணாநிதியும், சிதம்பரமும் இந்தியா போர் நிறுத்தத்தை வலியுறுத்தியதாக கூறியிருக்கிறார்கள்.
ஒருமுறை கூட இந்தியா போரை நிறுத்த வேண்டும் என்று இலங்கை யிடம் வலியுறுத்தவில்லை என்று அந்நாட்டு அதிபரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே வடநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி யளித்துள்ளார்.
ஐ.நா.வில் இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி பேச விடாமல் சீனா மட்டுமன்றி இந்தியாவும் முட்டுக் கட்டை போட்டு வருகிறது. இந்தியர்களின் பணம்தான் இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்ய பயன்பட்டு வருகிறது. இது முற்றிலும் உண்மை என்றார்.
பிரபாகரனைப் பிடிக்க முடியாது...
முன்னதாக நேற்று சென்னையில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களான தா.பாண்டியன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், முகம்மது அலி ஜின்னா ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார் ராமதாஸ்.
நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் தென் சென்னை அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் மத்திய சென்னை வேட்பாளர் முகமது அலி ஜின்னா மற்றும் வட சென்னை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் தா பாண்டியன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
சைதாப்பேட்டையில் அவர் பேசுகையில்,
இந்தியாவிலே கூட்டணிக்காக வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் கூட்டணியை தேர்வு செய்தது பாமக மட்டும் தான். ஜெயலலிதாவும் இதை ஆச்சரியமாக கேட்டார். அப்போது அவர், அண்ணாவும் ஒருமுறை தி.மு.க. தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்பது பற்றி கட்சியின் பொதுக்குழுவை கூட்டி, வாக்கெடுப்பை நடத்தியதாக குறிப்பிட்டார்.
இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர் பிரணாப்முகர்ஜி, வெளியுறத் துறைசெயலாளர் சிவசங்கர மேனன், தேசிய ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இலங்கை அரசிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லை.
மத்திய அரசு சவப்பெட்டி அனுப்புகிறது...
ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு சவப்பெட்டிகளை செய்து அனுப்புகிறது. அங்கே கொத்து கொத்தாக குண்டுகளை போட்டு இலங்கை தமிழர்களை கொல்கிறார்கள். தமிழர்களை வேகமாக கொல்லுங்கள் என்று சொல்வதற்காக தான் இந்திய அமைச்சரும், அதிகாரிகளும் இலங்கைக்கு சென்றிருக்கின்றனர்.
ஏழைகளை ஒழித்து விட்டால் வறுமை இருக்காது என்று சொல்லும் கூட்டத்தை போல தமிழர்களை ஒழித்து விட்டால் பிரச்சினை இருக்காது என்று கருதுகிறார்கள். அமெரிக்கா கூட இன்றும், போரை நிறுத்து என்று இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ஆனால் இனவெறி ஆட்சியை நடத்தி வரும் ராஜபக்சே யாருடைய பேச்சையும் கேட்க தயாராக இல்லை.
பகத்சிங், நேதாஜி போல்...
பிரபாகரனை தீவிரவாதி என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்றும் சொல்லி வருகின்றனர். பகத்சிங்கை கூட அப்படி தான் சொன்னார்கள். சுபாஸ் சந்திரபோசை அப்படி தான் சொன்னார்கள். விடுதலைக்காக போராடக்கூடியவர்களை அப்படிதான் சொல்வார்கள்.
பிரபாகரனை பிடித்து விடுவார்கள், பிரபாகரனை கொன்று விடுவார்கள் என்று பிரசாரம் செய்து வருகின்றனர். இது போல் பல முறை சொல்லி பிரபாகரனை சாகடித்து இருக்கின்றனர். பிரபாகரனை யாராலும் பிடிக்க முடியாது. பிரபாகரனுக்கு இப்போது வயது 54. இன்னும் 20 ஆண்டுகாலம் போராடக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது.
புலிகள் வளர்ந்து கொண்டே போவார்கள்...
புலிகளை எப்படியாவது பழிவாங்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி வருகின்றனர். இப்போது நான் சொல்கிறேன் புலிகளை அழிக்க முடியாது. அவர்கள் வளர்ந்து கொண்டே இருப்பார்கள். இதை இந்த கூட்டத்தின் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
எம்ஜிஆர் ஈழத்தமிழர்களுக்காக எவ்வளவோ செய்து இருக்கிறார். எம்ஜிஆரின் நினைவு நாளை ஈழத்தில் இன்றும் அனுசரித்து வருகின்றனர். அங்கு ஒவ்வொரு வீட்டிலும் எம்.ஜி.ஆரின் உருவப்படம் இருக்கிறது.
இந்த தேர்தலில் நான் முன்பு சொன்னது போல அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். பாமக தொண்டர்கள் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுவார்கள். அதை பாமகவினர் செயலில் காட்டுவார்கள் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications