புதிய பார்வை நடராஜன் வீட்டில் போலீஸ் ரெய்டு
சென்னை: புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜனின் வீட்டில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். ஆனால் விடுதலைப் புலிகள் ஆதரவு சிடிக்கள் எதுவும் சிக்கவில்லை.
பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி இல்லாமல் தேர்தல் விளம்பர சி.டி.கள் வெளியிடுவது, எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் விளம்பரம் செய்வது, தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகவும், ஆட்சேபகரமாகவும் காட்சிகள் மற்றும் வசனங்கள் அடங்கிய சி.டி.கள் வெளியிடுவது போன்ற குற்றங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று முன்தினம் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன் அறிவித்து இருந்தார்.
இதன் அடிப்படையில் சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பெசன்ட்நகர் கலாசேத்திரா காலனியில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராஜனின் வீடு உள்ளது. அங்கு துணை கமிஷனர் திருஞானம் தலைமையில் போலீசார் வந்தனர்.
அப்போது வீட்டில் நடராஜன் இல்லை. வீ்ட்டில் ஆட்சேபகரமான சி.டி.க்கள் இருக்கிறதா என்பதற்காக சோதனையிட வேண்டும் என்று அங்கிருந்தவர்களிடம் போலீசார் கூறினர். பின்னர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சில சிடிக்கள் கிடைத்தன. அவற்றை வீட்டிலிருந்த சி.டி. பிளேயரில் போலீசார் போட்டுப்பார்த்தனர். ஆனால் போலீசார் எதிர்பார்த்து வந்த எந்த சிடியும் அதில் இல்லை.
இதையடுத்து சிடி எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டு போலீஸார் போய் விட்டனர்.
போலீஸார் போன பின்னர் நடராஜன் வீட்டுக்கு வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் இல்லாத நேரம் வீட்டில் சோதனை நடத்தியது தவறு. இதுதொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறேன்.
பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் இன்டர்நெட்டில் உள்ள இலங்கை தொடர்பான படங்களை டவுன்லோட் செய்வதற்கு மற்றவர்களுக்கு போன் மூலம் நான் கூறுவதுண்டு.
எனது போனை வழக்கம் போல் டேப்' செய்யும் போலீசார், அரசுக்கு எதிரான சி.டி. எதையோ நான் வெளியிடப் போகிறேன் என்று பயந்து இந்த சோதனையை செய்துள்ளனர். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications