கூட்டணியை விட்டு வெளியேறுவோம்-காங்கிரஸை பணிய வைத்த திமுக

இலங்கையில் போரை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் அவர்கள் விடுத்த கோரிக்கையை கருணாநிதி ஏற்க மறுத்துவிட்டார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படாவிட்டால் நான் உயிர் விடவும் தயார் என்று கருணாநிதி கூறிவிட்டார்.
இதையடுத்து சோனியா மற்றும் பிரதமரின் சார்பில் சிறப்புத் தூதர் ஒருவர் சென்னை விரைந்து கருணாநிதியை சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அப்படி யாரும் வரவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தான் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்தார்.
போரை நிறுத்த வைக்க மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என்று சிதம்பரம் கூறினார். ஆனால், போர் நிறுத்தப்பட்டதாக தகவல் வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவேன் என்று கருணாநிதி கூறிவிட்டார்.
இதையடுத்து இலங்கை வெளியுறவு அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் இறங்கினர். இதைத் தொடர்ந்து தாக்குதலை நிறுத்துவதாக அந் நாட்டின் உறுதிமொழியை மத்திய அரசு பெற்றது.
கை கழுவ முயன்ற காங்கிரஸ்:
முன்னதாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கையைக் கழுவப் பார்த்தது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து நாங்களும் கவலை கொண்டுள்ளோம். எங்களால் முடிந்ததை செய்து கொண்டு தான் உள்ளோம். கருணாநிதியின் உடல் நிலை குறித்து அதிகமாக கவலை கொண்டுள்ளோம். இன்னொரு நாட்டுக்கு எங்களால் உத்தரவு போட முடியாது என்றார்.
இதையடுத்து கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக திமுகவிடமிருந்து அறிவிப்பு வெளியாகும் என்று மிரட்டல் போனதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்தே திடீரென இலங்கையை நெருக்கியது மத்திய அரசு என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
கி.வீரமணி...
முன்னதாக கருணாநிதியை சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உண்ணாவிரதத்தை கை விடுமாறு கேட்டுக் கொண்டார். பி்ன்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், கருணாநிதி தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கான போராட்டத்தை வேறு விதமாக நடத்தலாம். நீங்கள் உத்தரவிடுங்கள், அதை நாங்கள் முன் நின்று நடத்துகிறோம் என்றார்.
வேடத்தை களைக்கும் உண்ணாவிரதம்-நக்கீரன் கோபால்
நக்கீரன் கோபால், முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்தினார். பின்னர் அவர் கூறுகையில், உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் மீது பாசமும், அன்பும் கொண்டவர் கருணாநிதி மட்டுமே. ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்காக போராடி வருபவர் இவர் மட்டுமே.
ஆனால் சில வேடதாரிகள் திடீரென தமிழீழத்தை அமைப்போம் என கூறுகின்றனர், ஏதோ நாளைக்கே ஈழத்தை அமைத்துக் கொடுக்கப் போவதைப் போல.
இத்தனை காலமாக பேசாமல் இருந்து விட்டு, அங்கு ஈழத் தமிழர்களுக்கு முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்து இப்போது தமிழ் ஈழம் அமைப்போம் என்று கூறுகின்றனர்.
அப்படிப்பட்ட வேடதாரிகளின் வேடத்தைக் களைக்கவே இன்று உண்ணாவிரதம் இருக்கிறார் கலைஞர். இந்த உண்ணாவிரதம் உணர்வின்பால் ஏற்பட்டது. இது வெற்றி பெறும், வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
இந்த உண்ணாவிரதத்தால் கலைஞரின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications