பிற்பகலில் சொன்னதை மாலையில் மறுத்த இலங்கை!
கொழும்பு: இலங்கை அரசு போர் நிறுத்ததை அறிவித்துவிட்டதாக மத்திய அரசு உறுதிமொழி தந்துள்ளதாகக் கூறி முதல்வர் கருணாநிதி உண்ணாவிரத்தை கைவிட்டாலும் இலங்கை அரசு அறிவித்துள்ளதை முழுமையான போர் நிறுத்தமாக கருத முடியாத அளவுக்கு அதன் விளக்கம் உள்ளது.
பிற்பகலில் வந்த அறிக்கை...:
கருணாநிதியின் உண்ணாவிரதத்தையடுத்து இன்று காலை மத்திய அரசு தந்த நெருக்கடியையடுத்து இலங்கை ராணுவம் வெளியிட்ட சிறிய அறிக்கையில்,
தமிழர் பகுதிகளில் விமானத் தாக்குதலை நிறுத்துமாறும், கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. புலிகளுக்கு எதிரான தாக்குதலில் தமிழர்கள் காயமடைவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனிமேல் எங்களது படையினர் புலிகளிடம் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மட்டுமே ஈடுபடுவர் என்று கூறப்பட்டுள்ளது.
மாலையில் பல்டி:
இதையடுத்து மாலையில் வெளியிட்ட இன்னொரு அறிக்கையில், அரசு போர் நிறுத்தம் செய்துள்ளதாக வரும் செய்திகள் திரித்து வெளியிடப்பட்டவை, உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்று இலங்கை ராணுவம் பல்டி அடித்துள்ளது.
தாக்குதலை முழுமையாக நிறுத்துவதாக இலங்கை கூறவில்லை. புலிகளிடமிருந்து தமிழர்களை மீட்கும் நடவடிக்கை என்ற பெயரில் இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் தொடரலாம்.
கனரக ஆயுதங்கள், வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட மாட்டாது என இலங்கை அறிவித்துள்ளது. எனவே, சாதாரண ஆயுதங்களை வைத்து இலங்கைப் படைகள் தாக்கலாம்.
மேலும், பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க முன்னுரிமை தரப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது. புலிகள் பகுதியில் உள்ள மக்களை அவ்வாறு மீட்கும்போது புலிகள் தாக்கினார்கள், பதிலுக்குத் தாக்கினோம் என்று கூறி இலங்கைப் படைகள் தாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அதை சாக்காக வைத்துக் கொண்டு மறுபடியும் இலங்கைப் படைகள் தாக்குதலை தொடங்கலாம்.
ஆனாலும் இலங்கை இந்த அளவுக்காவது இறங்கி வந்தது திமுகவுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. ஆனால், இத்தனை காலம் காத்திருந்துவிட்டு தேர்தல் வரும்போது தான் இந்த உண்ணாவிரதத்தை நடத்தி தமிழர்களை காக்க முயன்றிருக்க வேண்டுமா என்ற கேள்வி திமுகவை நோக்கி எழுந்துள்ளது.
அதே போல மனம் வை்ததால் இலங்கையை நெருக்க முடியும் என்றாலும் கூட மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தது என்ற கேள்வியும் காங்கிரசை நோக்கி எழுந்துள்ளது.
இப்போதைக்கு திமுகவும்-காங்கிரசும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், தேர்தல் நேரத்தில் இலங்கையில் மீண்டும் என்ற தகவல் ஏதும் வந்தால் அது இந்தக் கூட்டணிக்கு பெரும் பாதகமாக அமையும் என்பது நிச்சயம்.