மேற்கு தொடர்ச்சி மலையில் நக்சல்கள் நடமாட்டம்?
புளியங்குடி: தேர்தலை சீர்குலைக்க மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகரிக்கலாம் என உளவுத்துறை கொடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 13ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலின் போது நக்சலைட்டுகளால் அசம்பாவிதம் சம்பவங்கள் நடக்கலாம் என உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக நக்சலைட்டுகள் ஊடுருவலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடியிலிருந்து சிவகிரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சத்தியமங்கலத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு தனிப்படை பிரிவு போலீசார் முகாமிட்டு்ள்ளனர்.
இரவு, பகலாக அவர்கள் மலைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வனத்துறை அதிகாரிகள் ஓத்துழைப்புடன் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் வரைப்படைத்தை பெற்று அங்கு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
மேலும் நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் உளவு பிரிவு போலீசாரும் புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கணகாணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைப்பகுதியில் புதிய ஆட்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸ் அல்லது வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு மலைவாழ் மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.