இப்போது, மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையும் தாக்குதல்!
ராமேஸ்வரம்: இதுவரை இலங்கை கடற்படையிடம் சிக்கி சின்னாபின்னமாகி வந்த தமிழக மீனவர்கள் இப்போது இந்திய கடலோரக் காவல் படையிடம் சிக்கி தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
நமது நாட்டு படையே தாக்க ஆரம்பித்திருப்பதால் மீனவர்கள் பெரும் கொதிப்பும், கோபமும் அடைந்துள்ளனர். இன்று போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
ராமேசுவரம் துறைமுகம் மற்றும் சங்குமால் கடல் பகுதியில் இருந்து கடந்த 24-ந் தேதி 20-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் தேவசகாயம், ஜெரோமியஸ், பிச்சையா என்பவருக்கு சொந்தமான படகில் இருந்த 19 மீனவர்களின் அடையாள அட்டைகளை திடீரென சோதனை செய்தனர்.
இந்த நிலையில் அந்த படகில் இருந்த அனைத்து மீனவர்களையும் நாட்டுப்படகில் இருந்து இந்திய கடலோர காவல் படையினர் தங்களது கப்பலில் ஏற்றி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பீதியடைந்த மீனவர்கள் மீன் பிடிப்பதை கைவிட்டு பாதியிலேயே கரைதிரும்பினர்.
இது குறித்து அடிமை, குழந்தைசாமி, சவேரியார் அடிமை முருகேசன் ஆகியோர் கூறுகையில், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது பெரிய கப்பலில் வந்த இந்திய கடலோர காவல் படையினர் எங்களிடம் எதுவும் கூறாமல் அனைவரையும் படகில் இருந்து கப்பலில் ஏற்றி மண்டியிட வைத்து தாக்கினர். காரணம் கேட்டபோது அவர்கள் ஒன்றும் கூறவில்லை.
சுமார் 2 மணி நேரம் அவர்கள் எங்களை சித்ரவதை செய்தனர். அதன் பின்னர் கரையை நோக்கி செல்லும்படி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனால் பாதியிலேயே கரை திரும்பினோம்.
இலங்கை கடற்படை தாக்கி வந்த நிலையில் இந்திய கடலோர காவல்படையும் தாக்க தொடங்கி உள்ளது எங்களை வேதனை அடைய வைத்துள்ளது என்றார்.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
இந்தியக் கடலோரக் காவல் படையின் செயலைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications