தேர்தல் பணிக்கு வந்த ஒரிஸ்ஸா போலீஸ்காரர் மரணம்
தூத்துக்குடி: நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக தூத்துக்குடி வந்த ஒரிஸ்ஸா போலீஸ்காரர் ஒருவர் மஞ்சள் காமாலையால் மரணமடைந்தார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு படையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போலீசாருடன் மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட உள்ளனர்.
இதற்காக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்திற்கு 300 மத்திய ரிசர்வ் போலீசார் நேற்று முன்தினம் ரயிலில் நெல்லைக்கு வந்தனர். இதில் 85 பேர் தூத்துக்குடிக்கு சென்றனர்.
அவர்களில் ஓரிசா மாநிலம் புவனேஸ்வர் அருகேயுள்ள வாலேஸ்வர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ்தே என்பவரும் வந்திருந்தார். இவர் மத்திய ரிசர்வ் போலீசின் 130வது படைபிரிவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் சேர்ந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
தூத்துக்குடிக்கு செல்லும் வழியில் ரமேஷ்தே உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் மலேரியா மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரது நிலைமை மோசமாக இருந்ததால் அவர் மேல்சிகிச்சைக்காக நேற்றுமுன் தினம் இரவு நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications