இப்போதாவது கட்சிகள் ஒன்றுபட வேண்டும்-திருமா
சென்னை: 85 வயதிலும், தனது உடல் நலத்தைப் பொருட்படுத்தாமல் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து வரும் இந்த இக்கட்டான நிலையிலாவது அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து முதல்வருடன் இணைந்து குரல் கொடுத்தால்தான் இந்திய அரசை நிர்ப்பந்தப்படுத்தி இலங்கையில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முடியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாமக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் தமிழ் ஈழத்திற்கு நேர் எதிர் சக்தியான ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொண்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.
உண்மையில், அவர்கள் அனைவரும் கருணாநிதியுடன் இணைந்து குரல் கொடுத்திருக்க வேண்டும், போராடியிருக்க வேண்டும்.
ஆனால் ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொண்டு துரோகம் இழைத்து கொண்டிருக்கின்றனர்.
இப்போது கூட பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்குமாறு தனது கைப்பட ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ போன்றவர்களுக்கு கருணாநிதி கடிதம் அனுப்பினார். ஆனால் அதை புறக்கணித்து விட்டு அவர்கள் எல்லாம் ஓட்டுக் கேட்டக் போய் விட்டனர்.
இப்போதாவது, அந்தக் கட்சிகள் எல்லாம முதல்வர் கருணாநிதிக்கு உறுதுணையாக இருக்க முன்வர வேண்டும். அப்போதுதான் இந்திய அரசை நிர்ப்பந்தப்படுத்தி இலங்கையில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முடியும்.
தமிழகம் முழுவதும் தற்போது பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
நானும் கூட தலைவர் கலைஞருடன் இணைந்து உண்ணாவிரதம் இருப்பதற்காக சென்னைக்கு ஓடோடி வந்து கொண்டிருக்கிறேன்.
இந்த 85 வயதில், உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் இருந்து வரும் கருணாநிதியை கொச்சைப்படுத்தாமல் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க, கை கோர்க்க முன்வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications