'புதுக்கோட்டையும் போச்சு, திருச்சியும் போச்சு'!
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் நடந்த திமுக கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டத்தில் மிகவும் நொந்து போய் பேசினார் மத்திய உள்துறை இணையமைச்சர் ரகுபதி.
புதுக்கோட்டையில் திமுக, காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ரகுபதி பேசுகையில்,
தொகுதி மறுசீரமைப்பில் புதுக்கோட்டை தொகுதி பறிபோனதால் எனக்குத் தான் பெரும் இழப்பு. அதே போல் திருச்சி தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு போய்விட்டது. இதனால் எனக்கு இரட்டை இழப்பு.
நான் எம்.பியாக இருந்திருந்தால் புதுக்கோட்டை தொகுதி பறிபோய் இருக்காது என ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் திருநாவுக்கரசர் பேசி வருகிறார். தொகுதி மறு சீரமைப்பு குறித்து ராஜ்யசபாவில் மசோதா வந்த போது அங்கு இருந்த எம்பிக்களில் திருநாவுக்கரசரும் ஒருவர்.
அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதே அதை எதிர்த்து அவர் வெளிவந்திருந்தாலே தொகுதி பறிபோய் இருக்காது. அதை ஏன் அவர் அப்போது செய்யவில்லை. அதை விட்டுவிட்டு தொகுதி பறிபோனதற்கு நான் தான் காரணம் என்று திருநாவுக்கரசர் குழப்பம் விளைவித்து வருகிறார் என்றார்.