பிரபாகரன் மகன் சார்லஸ் நீர்மூழ்கி மூலம் தப்பினார்!
லண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகனும், விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் விமானப்படை தலைவருமான சார்லஸ் அந்தோணி 2 நாட்களுக்கு முன்பு நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதே போல பிரபாகரனும் தப்பக் கூடும் எனக் கூறப்படுகிறது.
தற்போது வெறும் 5 சதுர கிலோமீட்டர் அளவுக்குள்தான் விடுதலைப் புலிகள் இருக்கின்றனர். எனவே ராணுவம் பிரபாகரனையும், பிற விடுதலைப் புலிகள் இயக்கத்தினரையும் பிடிக்க தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி 2 நாட்களுக்கு முன்பு நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இதை இலங்கை கடற்படை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் கடற்படையை ஏமாற்றி விட்டு நீர்மூழ்கி மூலம் சார்லஸ் தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
பிரபாகரனும் கூட இதேபோல தப்ப முயற்சிக்கலாம் என முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க தளபதியான கருணா கூறியுள்ளார்.
இதுகுறித்து லண்டனிலிருந்து வெளியாகும் தி சண்டே டெலிகிராப் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
மிகவும் குறுகிய பரப்பளவுக்குள் பிரபாகரன் முடக்கப்பட்டு இருக்கிறார். இலங்கை ராணுவத்திடம் சரணடைய மாட்டார். சாகும் வரை பிரபாகரன் போரிடுவார். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. எனவே, கடல் வழியாக நீர் மூழ்கி கப்பலில் தப்பிச் செல்ல முடியாது. அவ்வாறு செல்வது மிகவும் கடினமான பயணமாக இருக்கும்.
பிரபாகரனின் மகன் சார்லஸ், நீர் மூழ்கி கப்பல் மூலமாக ஏற்கனவே தப்பிச் சென்று விட்டார். இலங்கையில் இருந்து எந்த நாட்டுக்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. பிரபாகரனும் தப்பிச் செல்லும் வழிகளை ஆராய்ந்து வருகிறார்.
ஒருவேளை இலங்கையில் இருந்து தப்பி சென்று விட்டால், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் சிறப்பான வரவேற்பு அவருக்கு கிடைக்கும். வெளிநாட்டில் தலைமறைவாக வாழும் சமயத்தில் நன்றாகவே இருப்பார்.
ஏனெனில், தமிழ் மக்களுக்கு சேர வேண்டிய ஏராளமான பணத்தை சுரண்டியதால் பெரிய பணக்காரராக இருக்கிறார்.
இந்த வாய்ப்பு தவிர வேறொரு வழியும் அவருக்கு உள்ளது. தன்னுடைய ஆதிக்க எல்லை சுருங்கி விட்ட நிலையில், பெரிய அளவிலான தற்கொலை சம்பவத்தை அவர் அரங்கேற்றுவார்.
அவருடன் சேர்ந்து, விடுதலைப்புலிகளும் அங்குள்ள தமிழர்களின் குடும்பங்களும் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்ய தூண்டுவார்.
பிரபாகரன் அழிக்கப்பட வேண்டும். தற்போது உயிருடன் உள்ள எஞ்சிய போராளிகளையும் அவர்தான் நேரடியாக இயக்கி வருகிறார் என்று கூறியுள்ளார் கருணா.
கடற்படை மீது ராணுவம் கோபம்..
இதற்கிடையே, இலங்கை கடற்படை மீது ராணுவம் கோபமாக உள்ளதாம். கடற்படை உரிய முறையில் கண்காணிப்பில் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகள் நீர்மூழ்கிகளை இயக்கும் அளவுக்கு அங்கு கடற்படை ஓட்டையாக இருப்பதாக ராஜபக்சேவிடம் ராணுவ உயர் அதிகாரிகள் புலம்பியுள்ளனராம்.
இதையடுத்து கடற்படையின் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளாராம்.