சொன்னதை மீறி கனரக ஆயுதங்கள் மூலம் இலங்கை தாக்குதல் - 272 தமிழர்கள் பலி
முல்லைத்தீவு: கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என இலங்கை அரசு கூறியதை மீறி ராணுவம், விமானப்படை மறறும் கடற்படை ஆகியவை நடத்திய பலமுனைத் தாக்குதலில் நேற்று 272 தமிழர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
நேற்று அதிகாலையிலேயே இலங்கையின் முப்படைகலும், புதுக்குடியிருப்பு கிழக்கில் உள்ள இரட்டைவாய்க்கால், வலைஞர் மடம், வெள்ள முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் பல முனைகளிலிருந்து தாக்குதல் தொடுத்தன.
விமானங்கள் மூலம் எறிகணைத் தாக்குதல்கள், ராணுவத்தினரின் பீரங்கித் தாக்குதல், மற்றும் கடற்படைக் கப்பல்களும் சேர்ந்து கொண்டு பாதுகாப்பு வளையப் பகுதிகளை சல்லடையாக துளைத்தன.
காலை முதல் முற்பகல் வரை தொடர்ந்து தாக்குதல்கள் நடந்தன. இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள குடியிருப்புக்களை நோக்கி நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் சாளம்பன் என்ற இடத்தில் மட்டும் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி கடற்படையினர் நடத்திய தாக்குதல்களில் 24 பேர் உயிரிழந்தனர்.
வலைஞர்மடத்தில் நடத்திய தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 172 பேர் காயமடைந்த நிலையில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வான் தாக்குதல்கள் நடைபெறாது என அறிவித்த சில நிமிடங்களிலேயே இருமுறை விமானம் மூலம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.
நேற்றைய தாக்குதல்களில் மொத்தம் 272 தமிழர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.