தமிழர் பகுதிகளில் பல மணி நேரம் பீரங்கித் தாக்குதல் - பலர் பலி
முல்லைத்தீவு: கனரக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ள போதிலும், இன்று காலை முதல் முள்ளிவாய்க்கால் பகுதியில், பீரங்கித் தாக்குதல், எறிகணைத் தாக்குதல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து மேற்கொண்டுள்ளது இலங்கை ராணுவம். இதில் பலர் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது.முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலை இலங்கை ராணுவம் மேற்கொண்டது.
சரமாரியாக சுடப்பட்டதால் அப்பாவி மக்கள் பங்கர்களுக்குள் போய் பதுங்கிக் கொண்டனர். இந்த பெரும் தாக்குதலில் பலர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்தனர். ஆனால் அவர்களில் பலரும் சிகிச்சை பெற வழியில்லாமல் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல வலைஞர் மடம் பகுதியிலும் பொதுமக்களை குறி வைத்து ராணுவம் தாக்குதல் நடத்தியது. முள்ளிவாய்க்காலின் தென் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளிகளும் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.
பல குழல் எறிகணை, பீரங்கித் தாக்குதல், கனரக மெஷின் துப்பாக்கி உள்ளிட்டவற்றைக் கொண்டு ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
வலைஞர் மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சாலைகளில் பிணங்கள் கிடக்கின்றன. காயமடைந்தவர்களும் ஆங்காங்கு விழுந்து கிடக்கின்றனர்.
எறிகணைத் தாக்குதலில், தற்காலிக மருத்துவமனையில் மட்டும் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கில் பலி...
மொத்த பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என அஞ்சப்படுகிறது.
200க்கும் மேற்பட்டோர் காயத்துடன் தற்காலிக மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்களில் பலர் கட்டுக்களுடன் வந்துள்ளனர்.
இந்த நிலையில் பிற்பகல் 1.20 மணியளவில் விமானப்படை குண்டு வீச்சு விமானம் ஒன்று, தெற்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் வட்டமிட்டுச் சென்றதால் குண்டு வீசப் போகிறார்களோ என்ற பீதி ஏற்பட்டது. இதனால் மக்கள் அங்குமிங்கும் ஓடி அடைக்கலம் தேடினர். ஆனால் விமானம் மூலம் குண்டு எதுவும் வீசப்படவி்ல்லை.
ராணுவத்துக்கு 600 மீட்டர் முன்னேற்றம்..
இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதலையும் மீறி, வலைஞர்மடம் பகுதியில் 600 மீட்டர் அளவுக்கு ராணுவம் முன்னேறியுள்ளது. இங்கு நடந்த சண்டையில் ராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.